காஞ்சிரங்குடியில் மஞ்சுவிரட்டு திருவிழா

காஞ்சிரங்குடியில் மஞ்சுவிரட்டு திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி கிராமத்தில் 21ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, 17ஆம் ஆண்டு மாபெரும் வடநாடு மஞ்சுவிரட்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கிருஷ்ணாபுரம் இளைஞர்கள், பொதுமக்கள், அனைத்து மகளிர் மற்றும் கிருஷ்ணாபுரம் பகுதி மக்கள் சார்பில் நடைபெற்ற இந்த மாபெரும் விழாவில், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருச்சி , புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிராமங்களில் இருந்து காளைகளும், வீரர்களும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
மஞ்சுவிரட்டு தொடங்கியதும் காளைகள் களத்தில் சீறிப்பாய, அவற்றை அடக்க வீரர்கள் ஆர்வத்துடன் களமிறங்கினர். காளைகளின் சீற்றமும், வீரர்களின் துணிச்சலும் இணைந்து களத்தை பரபரப்பாக்கியது. இதனை காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அதேபோல், வீரர்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு, காளைகளின் உரிமையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதில் கீழக்கரை காவல் ஆய்வாளர் பத்மநாபன் திருப்புல்லாணி காவல் ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் போலீசார் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டையும், கிராமிய கலாச்சாரத்தையும் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டு திருவிழா, காஞ்சிரங்குடியில் பெரும் திருவிழா கோலம் போல் காட்சியளித்தது.






