கீழக்கரை பள்ளி, கல்லூரி தலைமை ஆசிரியர்களுடன் போதைப் பொருள் ஒழிப்பு ஆலோசனை கூட்டம் – கீழக்கரை DSP யுவா பிரியா தலைமையில் நடந்தது
கீழக்கரை பள்ளி, கல்லூரி தலைமை ஆசிரியர்களுடன் போதைப் பொருள் ஒழிப்பு ஆலோசனை கூட்டம் – கீழக்கரை DSP யுவா பிரியா தலைமையில் நடந்தது
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஏர்வாடி, கீழக்கரை, திருப்புல்லாணி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கான போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி. யுவா பிரியா முன்னிலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,மாணவர்கள் போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு அடிமையாவதை தடுக்க பள்ளி, கல்லூரிகளின் பங்கு மிக முக்கியமானது. மாணவர்களின் நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றம் தென்பட்டால், உடனடியாக பெற்றோருக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி வளாகங்களை சுற்றி போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு குழு அமைத்து, மாதந்தோறும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். சந்தேகத்திற்கிடமான நபர்கள் பள்ளி வளாகம் அருகே நடமாடினால் உடனடியாக போதைப் பொருள் தடுப்பு உதவி எண்ணிற்கோ அல்லது கீழக்கரை காவல் நிலையத்திற்கோ தகவல் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.




