இராமநாதபுரம்

நாகம்பட்டி கல்லூரியில் தூத்துக்குடி மாவட்ட வரலாறும் பண்பாடும் பன்னாட்டு ஆய்வு மாநாடு மற்றும் நூல் வெளியிடுதல்

நாகம்பட்டி கல்லூரியில் தூத்துக்குடி மாவட்ட வரலாறும் பண்பாடும் பன்னாட்டு ஆய்வு மாநாடு மற்றும் நூல் வெளியிடுதல்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியின் தமிழ்த்துறை இணைந்து “தூத்துக்குடி மாவட்ட வரலாறும் பண்பாடும்” என்னும் தலைப்பில் பன்னாட்டு ஆய்வு மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழாவை வரும் நவம்பர் 28, 2026 அன்று நடத்துகின்றன.

வரலாற்றுத் தொன்மை, ஆன்மீகச் சிறப்பு, துறைமுக வளர்ச்சி மற்றும் இலக்கியப் பங்களிப்புகளால் தமிழ்நாடு வரலாற்றில் தூத்துக்குடி மாவட்டம் தனித்துவமான இடம் வகிக்கிறது. பண்டைக்கால பாண்டியர்களின் கொற்கைத் துறைமுகத்தின் கரிமக் கணிப்புச் சான்றுகள் கி.மு. 8 ஆம் நூற்றாண்டிற்கு முந்தையவை என்றும், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள தேரிக் காடுகளில்  கடினமான கற்களால் செய்யப்பட்ட சிறிய இரக இடைக்கற்காலக் கருவிகள், ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் முதுமக்கள் தாழிகள், தங்க ஆபரணங்கள், வெண்கலப் பொருட்கள், இரும்பு ஆயுதங்கள் கி.மு.1600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றும்,  சிவகளையில் நடைபெற்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட நெல் மணிகள், முதுமக்கள் தாழிகள் யாவும் சுமார் கி.மு.1155 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என அறிவியல் முறைப்படி உறுதி செய்யப்பட்டுள்ளன.

சங்க காலம், பக்தி இயக்க காலம், தற்காலம் வரையிலுமாகப் பல்வேறு இலக்கியங்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்த மாவட்டம் இது. தூத்துக்குடியைக் கைப்பற்றியிருந்த ஐரோப்பியர்கள் கி.பி. 1532 லிருந்து துறைமுக நகரமாக உருவாக்கினார்கள். வ.உ.சிதம்பரம் அவர்கள் முதன் முதலாக இங்கு கி.பி. 1907 ஆம் ஆண்டு, சூன் 1 ஆம் தேதி எஸ்.எஸ்.காலியா என்ற சுதேசிக் கப்பலை வெற்றிகரமாக இயக்கினார். இத்துறைமுகம் நாட்டின் 10 ஆவது பெரிய துறைமுகமாகும். இத்துறைமுகம் வருடத்திற்கு ஒரு மில்லியன் வணிகப் பொருள்களைக் கையாள்கிறது என்கிற பெருமையையும் பெற்றுள்ளது. இச்சிறப்பினை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் யாவரும் அறியும் பொருட்டு ஆய்வு மாநாடு  மற்றும் நூல் வெளியிடுதல் நடைபெற உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தின் வரலாறு மற்றும் பண்பாடுகள் பற்றியதாகக் கட்டுரை அமைய வேண்டும். A4 தாள் அளவில் 8 பக்கங்களுக்கு மிகாமல் Arial Unicode font இல் இருக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரை சொந்த முயற்சியாகவும், இதற்கு முன்னர் வேறெங்கும் பிரசுரிக்கப்படாததாகவும், தரம்மிகு கட்டுரையாகவும் இருக்க வேண்டும்.  அனைத்துத் துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தம் கட்டுரையினை எழுதலாம். *மாணவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மற்றும் தமிழ் ஆர்வலர்கள் யாவரும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை*  ISBN எண்ணிடப்பட்ட கருத்தரங்க நூல் (Hardcover Book), சான்றிதழ், வழங்கப்படும். கட்டுரையை thoothukudihistory198620@gmail.comcrsethu1@gmail.com   என்கிற இரண்டு  மின்னஞ்சல் முகவரிக்கும் Word file and PDF ஆக, அக்டோபர் 25, 2026 க்குள் அனுப்ப வேண்டும். 

தொல் பழங்காலம் முதல் தற்காலம் வரை ஆய்வுக்கான களங்களாக எடுத்துக்கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்டப் புவியியல் அமைப்பு.  தொல்லியல் ஆய்வுகள், நடுகற்கள், கல்வெட்டுகள்.  பொருநை நாகரிகம், கடல்சார் வணிக வரலாற்றின் பரிணாம வளர்ச்சி.  சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரையிலான பதிவுகள்.  தூத்துக்குடி மாவட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள்.  தூத்துக்குடி மாவட்ட வரலாற்றில் பங்காற்றிய வெளிநாட்டவர்கள்.  தூத்துக்குடி நெய்தல் நிலமக்களின் பண்பாட்டு மரபுகள்.  தூத்துக்குடி மாவட்ட நாட்டார் தெய்வங்கள், கலை – இலக்கியங்கள், நிகழ்த்துக்கலைகள், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், வழிபாட்டு மரபுகள், சூழலியல், வேளாண்மை, தொழில்கள், உற்பத்தி, ஏற்றுமதி, உயிரினங்கள், மரம் – செடி – கொடிகள் உள்ளிட்டனவும் பிறவும்… போன்றவற்றை உள்ளடக்கியதாகக் கட்டுரைகள் இருக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. விஷு மகாஜன், இ.ஆ.ப., திருவெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரிகளின் இயக்குநர் முனைவர் அ. வெளியப்பன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் மா. முருகானந்தம் ஆகியோர்களின் வழிகாட்டுதலின் படி, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் சேதுராமன், இணை ஒருங்கிணைப்பாளர் பவானி ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button