மதுரை அருகே விபத்தில் முதுகுளத்தூர் கல்வி அதிகாரி சாவு
மதுரை அருகே புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் முதுகுளத்தூர் பகுதி உதவிக் கல்வி அதிகாரி உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் மேல்முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சூசைதாஸ்(54). தொடக்கக் கல்வி உதவி அதிகாரி. இவரது மகன் அருண்ராகுல். ஜப்பானிய நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஊர் வந்திருந்த அருண்ராகுல் புதன்கிழமை மீண்டும் ஜப்பான் செல்ல மதுரை விமான நிலையம் வந்தார். அவரை வழியனுப்ப சூசைதாஸýம் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
மகனை விமான நிலையத்தில் விட்டுவிட்டு மீண்டும் ஊர் செல்வதற்காக விரகனூர் சுற்றுச்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது கண்டெய்னர் லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். இதுகுறித்து தகவலறிந்த அவரது மகன் அருண்ராகுல் விமானம் ஏறாமலேயே திரும்பினார். மதுரை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சூசைதாஸ் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிலைமான் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.