ஆன்லைன் மோசடி இராமநாதபுரத்தில் 4 ஏஜெண்ட் கள் கைது

ஆன்லைன் மோசடி இராமநாதபுரத்தில் 4 ஏஜெண்ட் கள் கைது
ராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் ஆன்லைன் மோசடியில் கிடைத்த பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி வெளி நாடுகளுக்கு அனுப்பிய 4 ஏஜன்டுகளை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்
இராமநாதபுரம் மாவட்டத்தில் சிலர் ஆன்லைன் மோசடி மூலம் கிடைத்த பணத்தை ஏ.டி.எம்., இல் எடுத்து கிரிப்டோ கரன்சியாக மாற்றி வருவதாக சைபர் கிரைம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள ஏ.டி.எம்., மையங்களை கண்காணித்த போலீசார், இருவரை கைது செய்து விசாரித்தனர்.
மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த மோசடியில் தொடர்புடைய வன்னிக்குடி சதீஷ் 34, சபீர்கான் 24, இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடம் இருந்து ஏ.டி.எம்.,கார்டுகள், வங்கி கணக்கு புத்தகம், 3 அலைபேசிகள், ரூ.2 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் பரமக்குடி கே.கருங்குளத்தை சேர்ந்த கபிலன் 35, எமனேஸ்வரம் எஸ்.எஸ்.கோவில் தெரு சசிகுமார் ஆகிய இருவரும் கைதாகினர்.
இருவரிடம் இருந்து 20 வங்கி கணக்கு புத்தகங்கள், 25 ஏ.டி.எம்., கார்டுகள், ஒரு லேப்டாப் மற்றும் 10க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் ஆன்லைன் மோசடியில் கிடைக்கும் பணத்தை இராமநாதபுரத்தை சேர்ந்த சிலரின் வங்கி கணக்குகளில் வரவு வைப்பர்.
பின் அதை ஏ.டி.எம்., மையத்தில் எடுத்து கிரிப்டோ கரன்சியாக மாற்றி வெளி நாடுகளுக்கு அனுப்பும் ஏஜன்டுகளாக செயல்பட்டுள்ளனர். குறிப்பிட்ட தொகை கமிஷனாக கிடைத்ததால் இதை தொழிலாக செய்து வந்துள்ளனர்.
கைதான 4 பேரும் இராமநாதபுரம் மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.





