கவிஞர் மு.முருகேஷூக்கு ‘தமிழ் விருதினை’ உறவுச் சுரங்கம் அமைப்பு வழங்கியது

கவிஞர் மு.முருகேஷூக்கு ‘தமிழ் விருதினை’ உறவுச் சுரங்கம் அமைப்பு வழங்கியது

சென்னை.
சென்னையில் கடந்த 12 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் உறவுச் சுரங்கம் அமைப்பின் 13-ஆம் ஆண்டின் தொடக்க விழா நேற்று சென்னை மயிலாப்பூரிலுள்ள பாரதிய வித்யா பவன் அரங்கில் (பிப்.27, வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
விழாவிற்கு நீதியரசர் ஜெகதீசன் தலைமையேற்றார். பேராசிரியர் விஜயலெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கவிதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம், கட்டுரை, சிறுகதை என பல்வேறு வகைகளிலும் தொடர்ந்து எழுதிவரும் கவிஞர் மு.முருகேஷின் இலக்கியப் பங்களிப்பைப் பாராட்டிக் கவுரவிக்கும் வகையில் நீதியரசர் ஜெகதீசன், கவிஞர் மு.முருகேஷூக்கு ‘தமிழ் விருதினை’ வழங்கிச் சிறப்பித்தார்.
விழாவில் ‘தெய்வத்தமிழ்’ எனும் தலைப்பில் டாக்டர் சுதா சேஷைய்யன் சிறப்புரையாற்றினார். இவ்விழாவில், உறவுச் சுரங்கம் அமைப்பின் தலைவர் முனைவர் உலக நாயகி பழனி, கவிஞர்கள் இதயகீதம் இராமானுஜம், வசீகரன், கல்யாணி ஸ்ரீதர், வழக்கறிஞர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.




