மருத்துவர்கள் இல்லாமல் முடங்கும் சாயல்குடி கால்நடை மருத்துவமனை – கூடுதல் செலவில் தவிக்கும் விவசாயிகள்
மருத்துவர்கள் இல்லாமல் முடங்கும் சாயல்குடி கால்நடை மருத்துவமனை – கூடுதல் செலவில் தவிக்கும் விவசாயிகள்
சாயல்குடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள கால்நடை மருத்துவமனை பெயரளவுக்கே இயங்குவதாக விவசாயிகளும் கால்நடை வளர்ப்போரும் வேதனை தெரிவித்துள்ளனர்.
சாயல்குடி மற்றும் அதனை ஒட்டிய கிராமங்களில் ஏராளமான குடும்பங்கள் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்த்து வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். ஆனால் அரசு மருத்துவமனையில் நிரந்தர டாக்டர்கள் பணியில் இல்லாதது, தேவையான மருந்துகள் சரியாக கிடைக்காதது ஆகியவற்றால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டாய சூழ்நிலையில் தனியார் கால்நடை மருத்துவர்களை அணுக வேண்டியிருப்பதால் கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேபோல் கால்நடைகளுக்கான 1962 இலவச ஆம்புலன்ஸ் சேவை சாயல்குடி பகுதியில் ஒழுங்காக கிடைப்பதில்லை. கிராமங்களில் நடத்தப்படும் கால்நடை மருத்துவ முகாம்களும் மக்களுக்கு போதுமான பலன் தரவில்லை என புகார் எழுந்துள்ளது.
மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில், கால்நடைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசி முகாம்கள் மற்றும் உடனடி மருத்துவ சேவைகளை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.
எனவே மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தலையிட்டு, சாயல்குடி கால்நடை மருத்துவமனையை தேவையான பணியாளர்கள் மற்றும் மருந்து வசதிகளுடன் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தியுள்ளனர்.



