பெரியபட்டினத்தில் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா..

பெரியபட்டினத்தில் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா..

பெரியபட்டினம் கால்பந்து குழு (PFC) சார்பாக கடந்த ஒரு மாத காலமாக கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் பெரியபட்டினம் புதிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில் 334 நபர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். கால்பந்து, யோகா உட்பட ஆரோக்கியத்தை வலியுறுத்தும் பயிற்சிகள் திறமையான பயிற்சியாளர்களைக் கொண்டு இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டது.
இந்த முகாமின் நோக்கம் இளைய தலைமுறைக்கு விளையாட்டு மனப்பான்மை, ஒற்றுமை மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான முக்கியத்துவத்தை ஏற்படுத்துவது. மேலும் போதை போன்ற சமூகத் தீமைகளிலிருந்து இளைஞர்களை விடுவித்து அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவது ஆகும்.
அதில் கலந்து கொண்ட நபர்களை சீனியர், ஜூனியர், சப் ஜூனியர் என்று மூன்று பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு இடையில் லீக் அடிப்படையில் போட்டிகளும் நடத்தி இறுதியாக ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடத்தை பிடித்த அணிகளை கொண்டு இறுதி போட்டியும் நடத்தி முடிக்கப்பட்டது.
இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு நிகழ்வு மற்றும் கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு விழா இன்று (28.05.2025) அன்று நடைபெற்றது.
இதில் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அப்பாஸ் அலி, திருப்புல்லாணி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சிவசாமி, பழனிவலசை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வே.முருகன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் ரியாஸ் கான், பெரியபட்டினம் ஆண்கள் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அன்சாரி உட்பட ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். பி.எப்.சி யின் ஆலோசகர் சேகு ஜலாலுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ரிப்னாஸ் தொகுத்து வழங்கினார். பி எப் சி யின் ஒருங்கிணைப்பாளர் முகம்மது ஜெசாம் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்.
மேலும் இந்த நிகழ்வில் கிரிக்கெட் பயிற்சியாளருக்கான தேசிய விருது பெற்ற இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அப்பாஸ் அலி அவர்களுக்கு பெரியபட்டினம் ஊர் மக்கள் சார்பாக சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.





