கவிதைகள் (All)

எது இனிது?

மனிதன் தன் வாழ்நாளில் எது இனிது எது இனிது
என்று தேடியே காலத்தை கடத்தி விடுகிறான்.

கவிஞர் மஞ்சை மயிலன், வாழ்க்கையில்
இனியது எது என்று, இனிதாக உரைத்துள்ளார்.

எது இனிது?

ஆக்கிவைத்த உணவின்
அறு சுவையா இனிது?
தேக்கிவைத்த அன்பின்
திருவினையே இனிது!

படைத்துவைத்த காவியத்தை
படித்தலா இனிது?
படித்தவற்றை வாழ்வில்
கடைபிடித்தலே இனிது!

வடித்துவைத்த ஓவியத்தை
இரசித்தலா இனிது?
வடித்தவனின் கருத்தென்ன – அதைப்
பகுத்தறிதலே இனிது!

வாழ்ந்து மறைந்தவரை நாளும்
வாழ்த்தலா இனிது?
வாழ்ந்தவரைப் போல் நாமும்
வாழ்ந்து காட்டல் இனிது!

சொத்தைச் சேர்த்து வைத்துச்
சுவைத்தலா இனிது?
கொஞ்சமேனும் பிறருக்காகக்
கொடுத்து வாழ்தல் இனிது!

மது மங்கை இவை தரும்
மயக்கமா இனிது?
மனைவி மக்கள் மகிழ வீட்டில்
வாழும் வாழ்க்கையே இனிது!

கேட்டவுடன் பொருளையள்ளிக்
கொடுத்தலா இனிது?
கேட்கும் பாத்திரத்தின்
தன்மையறிதலே இனிது!

துயிலெனப் படுக்கையை
விரித்தலா இனிது?
விரித்த படுக்கையில் உடனே
விழி மூடிப் போதல் இனிது!

எல்லாம் அவன் செயல் – என
சொல்லலா இனிது?
ஏனிந்தக் கோலம் – என
எண்ணும் செயலே இனிது!

எண்ணம் சொன்ன செய்திகளை
ஏட்டில் எழுதலா இனிது? அதை
எடுத்துப் படிப்பவர் மனத்திரையில்
இடம்பிடித்தலே இனிது!

————————————————–
நன்றி: திரு. பொ. ஆனந்த் பிர‌சாத்
————————————————–

அனுப்பி உதவியவர்

jamalminjamal@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button