கவிதைகள் (All)

அன்னையர் தின வாழ்த்துக்கள் 

அன்னையர் தின வாழ்த்துக்கள் 

உன்னைக் கருவில் சுமந்து 

இன்னுயிர் கொடுத்து வளர்த்து 

தன்னுயிர் பணயம் வைத்து 

உன்னை ஈன்றெடுத்த  

அன்னையை தினம்  வணங்கு.  

அருமை மகவாய்  விளங்கு .

விண்ணினும்  உயர்ந்த பாசம் 

மண்ணினும் பரந்த உள்ளம் 

கடலினும் ஆழ்ந்த அன்பு 

காற்றினும் விரைந்த அக்கறை 

மலையினும் உயர்ந்த கருணை 

அனைத்தையும் நிறைத்து செய்த 

அற்புதப்  படைப்பே அன்னை. 

 உதிரப்பால்  கொடுத்து 

உறுபசி தீர்த்திடுவாள் . 

உன் விருப்பங்களை 

உடனே நிறைவேற்றிடுவாள் .

உன் ஒவ்வொரு அசைவினிலும் 

உற்சாகம் காட்டிடுவாள்.

உறவுகளைப்  புரிய வைத்து 

உள்ளமதில் நிறுத்திடுவாள் .

ஒழுக்கமதைக் கற்பித்து 

உத்தமனாய் வளர்த்திடுவாள். 

உன் திறமைகளை வளர்க்க 

உற்சாகமூட்டிடடுவாள் . 

உலகத்தில் முதன்மை பெற 

உறுதுணையாய் இருந்திடுவாள். 

உன்னைப் பெற்ற  அன்னையை 

உள்ளத்தில்  நிலை நிறுத்தி 

உயர்ந்த இடம் கொடுத்து 

உரியபடி  மதித்து  ஒரு 

உத்தமப் பிள்ளையாய் இருத்தலே 

உன் நன்றிக்  கடனன்றோ .   

அன்னையர் தினத்திற்கென்று 

உன்னிடம் இருந்து அவள் 

பரிசுகள் கேட்பதில்லை. 

பாசமே கேட்டிடுவாள். 

முதியோர் இல்லம் சேர்த்து 

முடக்கிடாது அவளை  என்றும் ,

மதித்து உடன் வைத்துக் காத்தலே – பெற்ற 

மக்களின் கடமையன்றோ . 

தாய்மார்கள்  தினமாம் இன்று  

தாரணி முழுவதும் உள்ள 

தாய்க்குலங்களைப்  போற்றி 

தாள்பணிந்து வணங்கிடுவோம் . 

அன்பு மகன் , 

 சிலேடை சித்தர் சேது  சுப்பிரமணியம்.

11.05.2025 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button