மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில் ‘சங்கத் தமிழமுதம்’ சிறப்பு நிகழ்ச்சி

மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில் ‘சங்கத் தமிழமுதம்’ சிறப்பு நிகழ்ச்சி

மதுரை:
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் கீழ் செயல்படும் சங்கத் தமிழ்க் காட்சிக்கூடத்தில் 05.08.2026 அன்று முற்பகல் 10.30 மணிக்குச் ‘சங்கத் தமிழமுதம் என்ற தலைப்பில் சங்கத்தமிழ்க்கூடலின் நான்காவது நிகழ்ச்சி நடத்தப் பெற்றது.
‘சங்கத் தமிழமுதம்;; என்ற தலைப்பில் இளமனூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் திரு. மகேந்திர பாபு அவர்கள், பொழிவுரை ஆற்றினார்.
அவர் தம் உரையில், “சங்க இலக்கியம் என்பது பழமையான நூல்களின் தொகுப்பு மட்டுமல்ல் தமிழரின் வாழ்க்கை, பண்பாடு, அறம், காதல், இயற்கை மற்றும் மனிதநேயத்தை உலகிற்குச் சொல்லும் அரியவகை நூல்களாகும். அதியமான் தனக்குக் கிடைத்த அரிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாமல் ஒளவையாருக்குக் கொடுத்தது தமிழ்மொழியின் மேல் கொண்ட பற்றை உணர்த்துகிறது. வள்ளல்களில் ஒருவரான குமண வள்ளல் தனது தலையைக் கொய்து தனது தம்பி இளங்குமணனிடம் கொடுத்துப் பரிசில் பெற்றுக்கொள்ள பெருந்தலைச்சாத்தனார் என்ற புலவரிடம் கூறும் புறநானூற்றுப் பாடல்; மூலம் சங்க கால மன்னர்களின் கொடைச்சிறப்பை அறிந்துகொள்ளலாம். சங்க மன்னர்களின் விருந்தோம்பல் பண்பைச் சங்கப் பாடல்களும் விவேகசிந்தாமணியின் பாடலொன்றும் குறிப்பிடுகின்றது. சங்க காலப் பெண்கள் வீரம் மிக்கவர்களாக இருந்ததைப் புறநானூற்றின் ஒக்கூர் மாசாத்தியார் பாடல் உணர்த்துகின்றது. போர்க்களத்தில் முதல்நாள் தனது கணவனைப் பறிகொடுத்த வீரத்தாய் மறுநாள் தனது பிள்ளையின் கைகளில் வாளைக்கொடுத்துப் போர்க்களம் அனுப்புகிறாள். இவ்வாறாகச் சங்க இலக்கியங்கள் வாழ்க்கை நெறிகளை உணர்த்தும் பொக்கிசங்களாகத் திகழ்கின்றன” என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியைச் சங்கத் தமிழ்க் காட்சிக்கூட விளக்குநர் திருமதி ரெ.புக்ஷ்பநாச்சியார் ஒருங்கிணைத்தார்.
இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனர் திரு.செல்வம் ராமசாமி அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மதுரை, மங்கையர்க்கரசி மேல்நிலைப் பள்ளியின் மாணவர்களும் ஆசிரியர்களும் தமிழறிஞர் பெருமக்களும் என 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.






