பெற்றால்தான் பிள்ளையா?

பெற்றால்தான் பிள்ளையா?

பாளையங்கோட்டை மேடை போலீஸ் ஸ்டேஷன் அருகே 85 இருபால் குழந்தைகள் ஒரு குடும்பமாய் விளங்கும் அஸ்போர்ன் இல்லம். இது ஒரு உண்டு உறைவிடப் பள்ளியாய் உள்ளது. அநேக குழந்தைகளுக்கு தாய், தந்தை கிடையாது. வறுமையால் சூழப்பட்ட பல குடும்பத்துப் பிள்ளைகள் இங்கு படிக்கின்றனர். 1 முதல் 8ம் வகுப்பு வரை இங்கு தங்கிப் படித்துவிட்டு பின்னர் வேறு பள்ளிகளுக்குச் செல்கின்றனர். நூற்றாண்டு மண்டபம் அருகே உள்ள அஸ்போர்ன் பள்ளி துவக்கப்பட்ட ஆண்டு 1878. சுமார் 150 வருடங்களாக பல ஏழைக் குழந்தைகள் பசியாறவும், இளைப்பாறவும் ஏதுவாக செயல்பட்டு வருகிறது.
சி.எம்.ஸ் அஸ்போர்ன் பள்ளியில் இக் குழந்தைகளை கவனிக்க 7 பேர் உள்ளனர். உணவுக்கு முன் ஜெபம் கட்டாயம். ஆவி பறக்கும் உணவு ஆமெனுக்குப் பின்னரே. திருமணம், திருவிழா, சடங்கு, பிறந்தநாள், நினைவு நாள் வெளி உணவு இங்கு குழந்தைகளுக்கு அவ்வப்போது வருகிறது. தலைமையாசிரியை அமலா, ஆசிரியைகள் எலிசபெத் ராணி, ஜெயபாரதி, ஜான்சி ராணி, பாத்திமா விஜயா லதா, நிஷா செல்வராணி இந்த குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கின்றனர். தினமலர் பத்திரிக்கை அதிபர் தினேஷ் அஸ்போர்ன் குழந்தைகளை சந்தித்து, அளவளாவி, அறிவுரைகள் நல்கி, உற்சாகப்படுத்தினார். மதிய உணவு ஏற்பாடுகள் செய்து பிள்ளைகளுடன் தரையில் அமர்ந்து உணவருந்தினார்.
உணவு, உடை, அரிசி, மசாலா, காய்கனி, தின்பண்டம் வழங்க எவரும் முன் வரலாம் என அமலா கூறினார். சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் நிகழ்வில் கலந்து கொண்டார். மாணவி அமோகம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு பிரியாணி, அல்வா, சம்பல், பழம் பரிமாறப்பட்டது. அங்குள்ள ஆதரவற்ற பிள்ளைகளின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு குறித்து திருமாறன் ஆலோசனைகள் வழங்கினார்.
பெற்றால் தான் பிள்ளையா?!





