இராமநாதபுரம்

முதுகுளத்தூரில் வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் 50-ஆம் ஆண்டு பொன்விழா கோலாகலமாக நிறைவு

முதுகுளத்தூரில் வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் 50-ஆம் ஆண்டு பொன்விழா கோலாகலமாக நிறைவு

முதுகுளத்தூர், ஜூலை 31:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்லியம்மன் கோயிலின் 50-ஆம் ஆண்டு பொன்விழா நிறைவு விழா இன்று பக்தர்கள் திரளான பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.

பொன்விழாவின் நிறைவு நாளையொட்டி அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பக்தி முழக்கங்களுடன் ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலம் வழிவிடு முருகன் கோயிலை சென்றடைந்ததையடுத்து, அங்கு சாமி தரிசனம் செய்து சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர்.

பின்னர் முளைப்பாரியை நீர்நிலையில் கரைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து குடும்ப நலன், வளமான வாழ்க்கை மற்றும் மழை வளம் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

விழாவையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், கோயில் வளாகம் மற்றும் ஊர்வலப் பாதை முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காக காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டனர்.

கடந்த பல நாட்களாக நடைபெற்ற யாகசாலை பூஜைகள், பால்குடம், அக்னிச்சட்டி, பூக்குழி, பூச்சொரிதல், முளைப்பாரி உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகளின் நிறைவாக நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதன் மூலம் அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்லியம்மன் கோயிலின் 50-ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவடைந்தன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button