தினம் ஒரு புத்தகம்
தினம் ஒரு புத்தகம்
பூக்கடையின்
வாசத்தையும்
சாக்கடையின்
நாற்றத்தையும்
மூக்குகள் உணர
மூன்றாமவரின்
முன்னுரை அவசியமில்லை
எனும் நன்னம்பிக்கை முனையிலிருந்து கவிதையின் மூலமாக நங்கூரமிட்டிருக்கிறார் வேளாங்கண்ணி சாதீக்.*
காதல், புரட்சி,
மனித நேயம், தன்னம்பிக்கை என ஒவ்வொன்றையும் வைர வரிகளால் கவிதை கடலில் முத்தெடுத்திருக்கிறார் நூலாசிரியர்.
நூலிலிருந்து
இன்றைய காலச்சூழலைப் பற்றி
காட்டையழித்த
இடத்தில்தான்
ஆலயங்கள் கட்டினோம்
கும்பிடு
வந்தாலும் வரும் மழை
பட்டினியால்
செத்துவிட்டான்
இனி கிடைக்கும்
வாய்நிறைய அரிசி
கிழிந்த ஆடைக்குள்
இருப்பதை பார்ப்பவன்
காமுகன்
இல்லாமையைப்
பார்ப்பவன்
கவிஞன்
தோல்வியின்
தொடர்கதையில்
வலிநிறைந்த வரிகள்
எத்தனைமுறை
மாற்றி எழுதினாலும்
தப்பாகவே போகிறது
தலையெழுத்து
பசியை அள்ளித்தின்று
வயிற்றை நிரப்பும்
எங்களுக்கு
எல்லா நாளும்
விரதம்தான்
எந்த சாமிக்கு
என்றுதான் தெரியவில்லை?
மனிதத்தை
சாப்பிடும்
மதங்கள்
சைவமா?
அசைவமா… ?
இப்போதெல்லாம்
ஆடையை மறைக்க
நிர்வாணத்தை உடுத்திக் கொண்டு
அலைகிறது நாகரீகம்.
நம்மை பாதுகாக்கும் எல்லா தெய்வங்களையும்
இரவில் பூட்டி வைத்தே
பாதுகாக்கிறார்கள்!
தேங்காய் பதம் பார்த்து
உடைக்கப்படுகிறது
மனசு உடைந்த பிறகு
பதம் பார்க்கப் படுகிறது.
உன்னை எழுதினேன்
என்னை படிக்கிறார்கள்!
ஒரே மழை
நீ நனைகிறாய்
நான் காய்கிறேன்
உணவோடு
வெண்டைக்காய்
உண்பதில்லை.
ஆனாலும்
அதிகரித்து கொண்டே போகிறது உன் ஞாபகம்.
சாமிக்கு போவதா ?
சாவுக்கு போவதா ?
மலர்கள் தாங்களே
முடி வெடுத்துக் கொள்ள முடிவதில்லை
சில பெண்களைப்போல..
பிணத்தின் மேல்
இருந்தாலும்
சிரிப்பதென்பது
பூக்களின் சிறப்பு.
சில கவிதைகள்
வாசிக்க தூண்டும்.
இன்னும் சில
யோசிக்க தூண்டும்.
உன்னை எழுதும்
கவிதைகள் என்னை
சுவாசிக்க தூண்டும் என்றென்றும்…
கவிதைக் குழந்தைகளைத்
தர அவர் தயார்
தாலாட்ட நீங்கள்
தயாரா?
சிறகுகளைத் தேடி
கே.ஜே.சாதீக்
தோழமையுடன்
சீனி.சந்திரசேகரன்
