கட்டுரைகள்

புத்தக வாசிப்பு எப்படி உங்கள் மூளையை ‘ரீ-வைரிங்’ செய்கிறது?

புத்தக வாசிப்பு எப்படி உங்கள் மூளையை ‘ரீ-வைரிங்’ செய்கிறது?

ஒரு வீடியோவைப் பார்ப்பதற்கும், அதே கதையைப் புத்தகமாக வாசிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு வெறும் ஊடகத்தில் மட்டும் இருக்காமல் நமது மூளையின் உள்ளமைப்பையே தலைகீழாக மாற்றக்கூடிய ஒரு மாபெரும் உயிரியல் செயல்பாடாக உள்ளது!

நமது மூளை அடிப்படையில் ஒரு சோம்பேறி! எந்த வேலையைச் சுலபமாகச் செய்ய முடியுமோ அதைத்தான் அது விரும்பும்.

நீங்கள் ஒரு சினிமாவையோ அல்லது சமூக வலைத்தள வீடியோவையோ பார்க்கும்போது, முகங்கள், இடங்கள், பின்னணி இசை என அனைத்தும் ரெடிமேடாக மூளைக்கு ஊட்டப்படுகிறது. மூளை இங்கே எந்த மெனக்கெடலும் இன்றி Passive நிலையில் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.

ஆனால், ஒரு நாவலை வாசிக்கும்போது அங்கே எழுத்துகள் மட்டுமே உள்ளன. அந்த எழுத்துகளை வைத்து, நாயகனின் முகத்தை, அவன் நடக்கும் வீதியை, வீசும் காற்றை, உணர்வுகளை உங்கள் மூளைதான் சுயமாகக் கற்பனை செய்து கட்டியெழுப்ப வேண்டும். அதாவது, மூளையின் Visual Cortex தனக்குத் தானே ஒரு மாபெரும் திரைப்படத்தை இயக்குகிறது. இது மூளைக்கான மிகக் கடுமையான வெயிட் லிஃப்டிங் உடற்பயிற்சியாகும்!

மனித மூளை ‘பேசுவதற்கும் கேட்பதற்கும்’ இயற்கையாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ‘வாசிப்பு’ என்பது இயற்கையானது அல்ல. அது மனிதன் செயற்கையாகக் கண்டுபிடித்த ஒரு திறன்!

எனவே, வாசிக்கத் தொடங்கும் ஒவ்வொரு முறையும் உங்கள் மூளை தன்னைத்தானே புதிய நரம்பியல் இணைப்புகளால் மறுகட்டமைப்பு செய்துகொள்கிறது. இதற்கு அறிவியலில் ‘நியூரோபிளாஸ்டிசிட்டி’ (Neuroplasticity) என்று பெயர். அதாவது, உங்கள் மூளை ஒரு ரப்பரைப் போல நெகிழ்ந்து கொடுத்து, புதிய திறன்களை உள்வாங்கி, தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்ளும் ஒரு மென்பொருள் அப்டேட்டைப் போன்றது இந்த வாசிப்பு!

அச்சுப் புத்தகங்களுக்கும், மொபைல் திரையில் வாசிப்பதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு. சமூக வலைத்தளங்களில் நாம் வாசிப்பதில்லை; வெறும் ‘ஸ்கேனிங்’ மட்டுமே செய்கிறோம். 30 நொடிகளுக்கு ஒருமுறை திரையை உருட்டும்போது, மூளைக்குள் ‘டோபமைன்’ என்ற ரசாயனம் சுரந்து ஒரு தற்காலிக போதையைத் தருகிறது. இது நமது கவனச்சிதறலை மோசமாகப் பாதிக்கிறது.

ஒரு அச்சுப் புத்தகத்தை எடுத்து, காகிதத்தின் வாசனையை நுகர்ந்து, ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் படிக்கும்போது, மூளை பல அமைப்புகளை ஒரே நேரத்தில் செயல்படுத்துகிறது. தொடு உணர்வு, பொறுமை, மற்றும் வாக்கியங்களின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொள்ளும் ‘நிர்வாகப் பகுத்தறிவு’ ஆகியவை அச்சுப் புத்தக வாசிப்பில்தான் உச்சக்கட்டத்தை அடைகின்றன.

புனைவுப் புத்தகங்களை வாசிப்பவர்களுக்கு உணர்வுப்பூர்வமான நுண்ணறிவு (Emotional Intelligence – EQ) மிக அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு நாவலில் வரும் கதாபாத்திரத்தின் வலியை, சந்தோஷத்தை, தவிப்பை வாசிக்கும்போது, நிஜ வாழ்விலேயே அந்த உணர்வுகளை நீங்கள் அனுபவிப்பதைப் போல உங்கள் மூளையின் நரம்புகள் தூண்டப்படுகின்றன.

இதனை உளவியலில் ‘Theory of Mind’ என்பார்கள். அதாவது, மற்ற மனிதர்களின் மனநிலையை, அவர்களின் இடத்திலிருந்து துல்லியமாகப் புரிந்துகொள்ளும் மாபெரும் பக்குவத்தை வாசிப்பு மட்டுமே மனிதனுக்குத் தருகிறது. ஒருவன் தன் நிஜ வாழ்வில் ஒரு வாழ்க்கையைத்தான் வாழ முடியும்; ஆனால் ஒரு வாசகன் தன் வாழ்நாளுக்குள் ஆயிரம் பேரின் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிடுகிறான்!

தொடர்ந்து புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, புதிய சொற்களஞ்சியங்கள் உருவாவதால் அவர்களின் பேசும் திறன் மற்றும் விமர்சனச் சிந்தனை பல மடங்கு கூர்மையடைகிறது. அதைவிட முக்கியமாக, வாசிப்பு மூளையில் புதிய செல்களைத் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருப்பதால், வயதாகும்போது ஏற்படும் ஞாபக மறதி நோய்களான ‘அல்சைமர்’ மற்றும் ‘டிமென்ஷியா’ போன்றவை வாசகர்களை எளிதில் தாக்குவதில்லை. வாசிப்பு உங்கள் மூளைக்கு ஒரு Cognitive Reserve எனப்படும் மாபெரும் பாதுகாப்பு அரணை உருவாக்குகிறது.

ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் சொல்வார்: “வாசிக்கும் மனிதன் இறப்பதற்கு முன் ஆயிரம் வாழ்க்கை வாழ்கிறான். வாசிக்காத மனிதன் ஒரே ஒரு வாழ்க்கையை மட்டுமே வாழ்கிறான்.”

புத்தகத்தில் மூழ்குவது என்பது இந்த நிஜ உலகப் பிரச்சனைகளிலிருந்து தப்பித்து ஓடும் ‘எஸ்கேபிஸம்’ அல்ல; மாறாக, இந்த நிஜ உலகத்தை இன்னும் வலிமையாக, இன்னும் தெளிவாக, இன்னும் நுட்பமாக எதிர்கொள்வதற்கான மாபெரும் ஆயுதங்களை நமது மூளைக்குள் நாமே தயாரித்துக்கொள்ளும் ஒரு பிரம்மாண்டமான தொழிற்சாலை!

எனவே, நீங்கள் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று உங்கள் தசைகளை முறுக்கேற்றுவதை விட, தினமும் ஒரு அரை மணி நேரம் நல்லதொரு புத்தகத்தை வாசித்து உங்கள் மூளையின் நரம்புகளை முறுக்கேற்றுங்கள்!

✍️ Abdullah Ibnu Naseer

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button