இந்திய தூதருடன் அபுதாபி அய்மான் சங்கம் மரியாதை நிமித்தமாக சந்திப்பு

இந்திய தூதருடன் அபுதாபி அய்மான் சங்கம் மரியாதை நிமித்தமாக சந்திப்பு
அபுதாபி :

அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்தில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் மதிப்புக்குரிய டாக்டர் தீபக் மிட்டலை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர், முதன்மை செயலாளர் ( சமூக விவகாரங்கள்) திரு. ஜார்ஜி ஜார்ஜ் உடன் இருந்தார்.
இந்த சந்திப்பில் அபுதாபியில் மற்றும் அல் அய்ன் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் இந்திய மக்களின் சமூக நலன் மற்றும் முன்னேற்றம் குறித்து பல்வேறு முக்கிய அம்சங்கள் பேசப்பட்டன மற்றும் தமிழ் நாடு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சகத்தின் உறுப்பினர் அட்டை பெறுவதற்கான வழிகாட்டல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
கடந்த 1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அய்மான் சங்கம் கடந்த நாற்பத்தி நான்கு (44) ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 3,500 இந்திய குடும்பங்களுக்கு சமூக, கல்வி, மனித நலம் மற்றும் நலத்திட்ட சேவைகளை வழங்கி வருவது குறித்து விளக்கப்பட்டது.
தூதர் டாக்டர் தீபக் மிட்டல் , அவசர கால உதவிகள், இறந்தவர்களின் உடல் மீள அனுப்பும் (Repatriation) சேவைகள், தொழிலாளர் நல ஆதரவு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருத்துவ உதவிகள், இரத்த தான முகாம் மற்றும் சமூக ஒற்றுமை நடவடிக்கைகள் போன்ற பல துறைகளில் அய்மான் சங்கம் செய்து வரும் சேவைகளை பாராட்டினார்.
இந்த சந்திப்பில் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை ஹெச்.எம். முகம்மது ஜமாலுதீன் தலைமையில் பொதுச் செயலாளர் லால்பேட்டை முகம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர், பைத்துல் மால் பொதுச் செயலாளர் பார்த்திபனூர் நிஜாமைதீன், துணைத் தலைவர் ஆவை எ ஸ் முகம்மது அன்சாரி, துணைத் தலைவர் காதர் மீரான் ஃபைஜி, செயற்குழு உறுப்பினர் அம்பகரத்தூர் முஹம்மத் கைசர், செயற்குழு உறுப்பினர் மதுரை மன்சூர் அலி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும் ஊக்கமளிப்பதாகவும் அமைந்தது. அதே வேளையில் தூதரின் வழிகாட்டலும் ஆதரவும், அபுதாபியில் உள்ள இந்திய சமூகத்திற்கு மேலும் சிறப்பான சேவைகளை வழங்க அய்மான் சங்கத்திற்கு வலுவூட்டும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
இந்திய சமூக நலனுக்காக தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் மதிப்புக்குரிய தூதர் டாக்டர் தீபக் மிட்டல், முதன்மை செயலாளர் திரு. ஜார்ஜி ஜார்ஜ் உள்ளிட்ட அனைத்து இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் அய்மான் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.



