முதுகுளத்தூர் உழவன் தோப்பு நகரில் பொங்கல் விழா

முதுகுளத்தூர் உழவன் தோப்பு நகரில் பொங்கல் விழா

-ஜனவரி 16
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள உழவன் தோப்பு நகரில் இளைஞர் அணி சார்பாக பொங்கல் விழா கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற தமிழரின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவைச் சிறப்பிக்கும் வகையில் பல்வேறு வகை போட்டிகள் வைத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உழவன் தோப்பு நகர் (UTC Boys) இளைஞரணி சார்பாக பரிசளிப்பு வழங்கப்பட்டது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர் சே.முனியசாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள். தன்னுடைய உரையில் இனி வரும் ஆண்டுகளில் பொங்கல் விழாவானது அறிவு சார்ந்த இலக்கியப் போட்டிகளை வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்தார். பின்னர் பள்ளி,கல்லூரி, ஊர் மக்கள் படிக்கும் வகையில் நூலகம் அமைப்பதற்கு நூல்கள் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
விழா ஏற்பாடுகளை இளைஞர் அணித்தலைவர் வே.ராஜா, துணைத் தலைவர் மு.மீனாட்சிசுந்தரம், செயலாளர் ஊ.தமிழரசன், பொருளாளர் மா.சிவமுனீஸ்வரன், கணக்காளர் பூ.வேல்முருகன் மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். இறுதியாக கலை நிகழ்ச்சிகள் வைக்கப்பட்டது. ஊர் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.






