இராமநாதபுரம்
நகையை ஒப்படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஜார் பகுதியில் அமைந்துள்ள டியூஷன் சென்டரில் 12-ம் வகுப்பு படித்து வரும் சிவமுருகன், செல்லம் ஆகிய மாணவர்கள் வழக்கம் போல் டியூசன் சென்றபோது ஒரு பவுன் மதிப்புள்ள தங்க நகை சாலையில் கிடந்துள்ளது. இதனை கண்ட மாணவர்கள் தங்க நகையை எடுத்து டியூஷன் ஆசிரியர்கள் முருகன் மற்றும் சரவணன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் ஆசிரியர்கள் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். அதன் பெயரில் தங்கநகையை தொலைத்த ஆனந்த் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின் தங்க நகையை உரியவரிடம் பரமக்குடி நகர் காவல் சார்பு ஆய்வாளர் கணேசமூர்த்தி ஒப்படைத்தார். மேலும் தங்க நகையை கீழே கிடந்து எடுத்து கொடுத்த மாணவர்களை சார்பு ஆய்வாளர் பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.




