கவிதைகள் (All)

மழைக்கு_மற்றொரு_பெயர்_பாவம்?

#மழைக்கு_மற்றொரு_பெயர்_பாவம்?

………………………………………..

மு.தமிமுன் அன்சாரி

…………………………………………

மழை

குதூகலம் நிறைந்த

ஒரு குழந்தை!

அது ஆசையுடன்

முத்தமிடுகிறது

பூமி பந்தை !

▪️

மழைத்துளிகள்

யாவும்

மேகங்கள் நடத்தும்

பேரணிகள்!

இடியும், மின்னலும்

அதன் தோழமைகள்!

▪️

மலையோரங்களில்

மனையோரங்களில்

வயல்களில்

வனங்களில்

மழைக்கு கிடைக்கிறது

மரியாதை!

ஆனால்

மனிதர்களின்

வாழிடங்களில்

கிடைப்பதோ

அவமரியாதை!

▪️

விலங்குகளிடமும்

பறவைகளிடமும்

அதற்கு வரவேற்பு!

மனிதர்களிடம்

மட்டுமே வெளிப்படுகிறது

முனுமுனுப்பு !

▪️

மழை

ஒரு தெருப்பாடகன் !

ஆனால்

இசைக்கு பதிலாக

கிடைப்பதோ

வரம்பற்ற வசை!

▪️

சனியன்

இம்சை

தொந்தரவு

என இரக்கமற்ற

விமர்சனங்கள் ஒருபுறம் !

மழையால் கிடைக்கும்

பள்ளிக்கூட

விடுமுறைகளில்

மகிழும் பிள்ளைகள்

மறுபுறம் !

▪️

மழைக்கு

பிடித்தது சுதந்திரம்!

அதற்கு தெரியாது

வானிலை

அறிக்கைகளின்

மந்திரம்!

▪️

மழையின்

ஒடு பாதையெங்கும்

வேகத்தடைகள்!

ஒட முடியாத

இடங்களிலும்

‘கான்கிரீட்’ கடைகள்!

▪️

கடலுக்கும், ஏரிக்கும்

செல்லவும்

இடையூறு !

கால்வாய்க்குள்

செல்வதிலும்

தகராறு!

▪️

மழை

ஒரு சுயநலமற்ற

போராளி!

ஆனால்

கேள்வி கேட்கத் தெரியாத

ஏமாளி!

▪️

பாவம் மழை!

அளவுக்கு அதிகமாக

பூமியை

நேசிப்பதுதான்

அது

செய்யும் பிழை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button