ரஜினி பெயரில் ரத்ததானக் கழகம் அவர் படித்த கல்லூரியில் துவக்கப்படுகிறது

ரஜினி பெயரில் ரத்ததானக் கழகம்

அவர் படித்த கல்லூரியில் துவக்கப்படுகிறது
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இயற்பெயரான சிவாஜி ராவ் கெய்க்வாட் பெயரில் ரஜினி படித்த பெங்களூரு ஏ.பி.எஸ் கல்லூரியில் ஒரு ரத்ததானக் கழகம் தொடங்கப்பட இருக்கிறது. கர்நாடக மாநிலம் பெங்களூர் ஏ.பி.எஸ் கல்லூரி புகழ்பெற்ற கல்லூரி. 5000 மாணவ மாணவிகள் இங்கு படிக்கின்றனர். ரஜினியும் 1964ஆம் ஆண்டில் இங்குள்ள மாலை கல்லூரியில் படித்துள்ளார். அதற்கான ஆதார ஏட்டினை இன்றளவும் முதல்வர் சுதர்ஸன் பாதுகாத்து வருகிறார். 90 ஆண்டுகளைக் கடந்த இந்த கல்லூரியில் ரஜினியை பெருமைப்படுத்தும் விதமாக ரஜினியின் இயற்பெயரான சிவாஜி ராவ் பெயரில் “சிவாஜி ராவ் கெய்க்வாட் ரத்ததான கழகம்” துவக்கப்படுகிறது. 23 :5 :2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஏ.பி.எஸ் கல்லூரி வளாகத்தில் ரத்ததானக் கழகம் துவக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்ய தங்கள் பெயர்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
சிவாஜி ராவ் கெய்க்வாட் ரத்ததானக் கழக துவக்க விழாவில் ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணராவ் கெய்க்வாட், பிரபல திரைப்பட நடிகர் கிஷோர் கலந்து கொள்கின்றனர். 1987 ஆம் ஆண்டு முதல் உலகமெங்கும் ரத்ததானக் கழகங்களை ரஜினி பெயரில் துவக்கிய தமிழ்நாட்டின் பூ. திருமாறன் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். தற்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கேரளாவில் தங்கியிருக்கும் ரஜினிக்கும் இந்த ரத்ததானக் கழக துவக்க விழா பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 23 பெங்களூர் இரத்ததான முகாமில் ரத்ததானம் செய்ய தமிழக, கர்நாடக ரஜினி ரசிகர்கள், முன்னாள் மாணவர்கள் பெருமளவில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முகாமில் பெறப்படும் ரத்தம் நமது இந்திய ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பிக்கப்படுவதாக கல்லூரி ஸ்தாபகர் ஸ்ரீ அனந்தச்சர், ஏ.பி.எஸ் கல்லூரி தலைவர் டாக்டர். விஷ்ணு பிரசாத், கல்லூரி செயலர் பேராசிரியர் பிரகாஷ், ஏ.பி.எஸ் மாலை கல்லூரி முதல்வர் சுதர்ஸன் குமார் தெரிவித்தனர்.
மூதாதையர் மராத்தி, பெற்றோர் வாழ்ந்தது தமிழகத்தின் நாச்சிக்குப்பம், பிறந்து வளர்ந்தது பெங்களூரு பசவன்குடி, உச்சகட்ட புகழ் உலகமெங்கும் என திகழும் ரஜினிக்கு இந்த ரத்ததானக் கழகம் பல நூற்றாண்டுகள் பெயர் சொல்லும் என திருமாறன் கருத்து தெரிவித்தார். அவசர கால சிகிச்சைகளுக்கு பெங்களூர் மருத்துவமனைகள், குறிப்பாக அரசு மருத்துவமனைகளுக்கும் இனி சிவாஜி ராவ் கெய்க்வாட் ரத்ததானக் கழகத்தின் உதவி அபரிதமாக இருக்க வாழ்த்துக்கள் என கிருஷ்ணாஜிராவ் தெரிவித்தார். முகாம் ஏற்பாடுகளை முதல்வர் சுதர்சன் செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் நூற்றுக்கணக்கில் சுமார் 1000 ரஜினி ரத்தானக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.



