பள்ளி கல்லூரி நூலகங்களில் பகவத்கீதை – பைபிள் – திருக்குர்ஆன்

பள்ளி கல்லூரி நூலகங்களில் பகவத்கீதை – பைபிள் – திருக்குர்ஆன்

பள்ளி கல்லூரி நூலகங்களில் மாணவ மாணவியர் படித்து போற்றி பயன் பெறத்தக்க வகையில் மும்மத நூல்களை தமிழகம் முழுவதும் வழங்கும் “ஞானச் சேவையை” சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் துவக்கி வைத்தார்.
திருக்குர்ஆன், பைபிள், பகவத் கீதை என மூன்று மார்க்க நூல்களையும் வளரும் பருவத்திலேயே குழந்தைகள் ஆழ்ந்து படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. திட்ட நிகழ்ச்சிக்கு பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். ஹார்லி டேவிஸ் முன்னிலை வகித்தார். அனைவருக்கும் பகவத் கீதை என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ள செங்கோட்டை காந்தியவாதி பள்ளி, கல்லூரி, பொது நூலகங்களுக்கு பகவத் கீதையை இலவசமாக வழங்குகிறார். “புதிய ஏற்பாடு” பலரால் கிடைக்கப் பெறுகிறது. இந்தத் திட்டத்தில் நாட்டமுள்ள பல இஸ்லாமிய பெரியோர்களால் திருக்குர்ஆன் வழங்கப்படுகிறது. மத சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு, நல்லவைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம், புனித நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய கருத்துகளில் தெளிவது, மும்மத நூல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நேரடி அறிவுரைகள், மறைபொருள், எடுத்துக்காட்டுகள், கதைகள், சம்பவங்களை மாணவர்கள் தெரிந்து கொள்வது இதன் பிரதான நோக்கம். காலப்போக்கில் பௌத்தம், சீக்கியம் சம்பந்தப்பட்ட நூல்களையும் நூலகங்களில் சேர்க்கும் திட்டம் உள்ளது. மனித மனம் தடம் புரளாமல் பக்குவப்பட்ட மார்க்க சிந்தனைகள், அறிஞர்களின் அருளுரைகள், ஞானிகளின் தத்துவங்களை குழந்தைகள் தெரிந்து கொள்ளட்டும். “கடவுள் மறுப்பாளர்களும்” அத்தனை விஷயங்களையும் தெளிவு படுத்திக் கொள்ள எல்லாம் படிக்கட்டுமே! கலாச்சார சீரழிவு இல்லாதிருக்க எல்லாமே ஒரு விகிதாச்சார அளவில் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். விரும்பியவர்களுக்கு மட்டுமே, விருப்பமுள்ள கல்வி நிலையங்களுக்கு மட்டுமே இந்த ஆராய்ச்சித் திட்டம். உள்நோக்கமில்லா உன்னத திட்டத்தை பெருவாரியாக ஆதரிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது. “எம்மதமும் சம்மதம் என்றாலும் எம்மதமும் சம்மதமில்லை” என்றாலும் முழு மனதுடன் இதுபோன்ற மனிதம் போற்றும் புனித நூல்களை தினமும் படிக்கும் போது நற்சிந்தனைகள் தானாகவே வளர்ந்து மொழி ஆற்றலும் அதிகரிக்கிறது என திருமாறன் தெரிவித்தார். அடுத்த தலைமுறைக்கான பாதையை சீர்படுத்தும் முயற்சியில் இதற்கு பின்னால் பல பேருடைய உழைப்பும் பங்களிப்பும் உள்ளன. மனித இனம் போற்றப்பிறந்த மனிதர்கள் மதங்களால் மாண்டு போகக் கூடாது என்பதே இந்தப் பணியின் நோக்கம்.
படக்குறிப்பு – கல்வி நிலையங்களுக்கு புனித நூல்களை வழங்கும் பாலச்சந்திரன், வெங்காடம்பட்டி பூ.திருமாறன், ஹார்லி.




