கவிதைகள் (All)

யார் நீ..?!

நண்பர்காள்..

உணர்ச்சிவசப்படுவது
ஆரோக்கியமல்ல…!

இது,
சிரிப்பவர் உலகம்..
உன் கண்கள் மட்டும்
ஒழுகுவதேன்..?

இது,
இருப்பவர் உலகம்..
திருவோட்டை
நீ இன்னும்
தழுவுவதேன்..?

நண்பா..
முட்டைக்குள்
கருவை வைத்தான்..
கருவுக்கு..
காற்றும் வைத்தான்..

ஆனால் உனக்கு..
ஆறாம்
அறிவை வைத்தான்..!

உனக்கென்ன..

சிறு பிராயம்
விளையாட மட்டும் தானா..?

இளமை..
காதல் கேளிக்கைக்கு
அர்ப்பணமா..?

முதுமை என்ன
சம்சார வாழ்க்கைக்கும்
சாரயத்திற்கும்
தர்ப்பணமா..??

நண்பா..

வாடிக்கொண்டிருப்பது
உன் வாழ்க்கைச் செடி..
உரமிட ஊரை அழைப்பது
மடமையடா..!

கீழே..
விழுந்துவிட்ட
வைரத்தை தேடும்போழ்துதான்..
அதன்
விலை மதிப்பே புரியும்
மனிதனுக்கு..!!!

***
உன்னைச் சுற்றிப் பார்..

நீராவதில்
நீருக்குச் சிரமமில்லை..
அது நீரின் தர்மம்..

நெருப்பாவதில்
நெருப்புக்கும் சிரமமில்லை..
அது நெருப்பின் தர்மம்..!

வீசுவதில்
காற்றுக்குச் சிரமமில்லை
சுற்றுவதில்
பூமிக்கும் சிரமமில்லை..!

ஆனால் மனிதா..

மனிதனாவதில் மட்டும்..
உனக்கு
ஏன் இவ்வளவு சிரமம்..???!!!


Posted By Adirai Mansoor to அதிரை எக்ஸ்பிரஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button