கவிதைகள் (All)

உலக குடும்ப தினம்

உலக குடும்ப தினம் -15.05.2025

ஆலமரம் போல அன்னை தந்தை இருக்க ,

அதன் வேர் போல் தாத்தா ,பாட்டிகள் விளங்க

ஆலம் விழுதுகள் போல குழந்தைகள் இருக்க ,

உறவுப்பறவைகள் வந்து உட்கார்ந்து இளைப்பாற 

நட்புகள் கூடி அதன்கீழ் அமர்ந்து குதூகலிக்க,

குடும்பம் என்பது இணைந்து இருத்தல் ஒரு வரமே.

ஒருவரை ஒருவர் சுமையாய் நினையாது ,

ஒருவர் சுமையை ஒருவர் பகிர்ந்து சுமப்பதுவும் ,

ஒருவர் வெற்றிதனில் அனைவரும் மகிழ்வதுவும் ,

ஒருவருக்குத் துன்பமெனில்

ஒருங்கிணைந்து தாங்குவதும்,

ஏற்றத்தாழ்வுகளை எண்ணத்தில்  கொள்ளாது ,

சமமாய் பாவித்து சந்தோஷம் எய்துவதும்  

குடும்பம் என்பதற்கு இலக்கணம், அறிவோமே. 

சச்சரவுகள் இல்லாது , சண்டைகள் இல்லாது ,

சங்கடங்கள் இல்லாது, குறை,நிறைகள்  இல்லாது இருப்பதல்ல குடும்ப உறவு.

அத்தனையும் இருந்தாலும் அப்போதே அதை மறந்து

அரவணைத்துச் செல்வதுதான்

அறிவான குடும்பமன்றோ.

குடும்பப் பொறுப்புகளை சமமாகப் பகிர்ந்துகொண்டு 

ஒன்றாக உட்கார்ந்து உணவைப் பகிர்ந்துண்டு ,

ஒன்று கூடி விவாதித்து , ஒற்றுமையாய் தீர்மானித்து 

ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதில்

ஒப்பற்ற ஆனந்தமே.

தவிர்க்க முடியாத நிலையில் தனிக்குடித்தனம் போனாலும்

நல்லது,கெட்டதுகளில் தவறாது கலந்து கொண்டு ,

ஒற்றுமைக்கு இலக்கணமென

ஊர் போற்ற வாழ்தல்தான்

முற்றிலும் பெருமை தரும் ,

முழுமையான இன்பம் தரும். 

யாதும் ஊரே யாவரும் கேளிர் என 

கணியன் பூங்குன்றனார் அழகாக சொல்லி வைத்தார். ,

வசுதைவ குடும்பகம்  என்று மகா

உபநிடதத்தில் உரைத்துளாளார்.

ஏடுகள் உரைத்ததெல்லாம் எல்லோர்க்கும் நன்மைக்கே.

வீடு நலம் பெற ,நாடு நலம் பெறும். 

நாடு நலம் பெற ,நானிலம் நலம்பெறும்.

குடும்ப உறவுகளை குன்றிலேற்றி வைத்திடுவோம். 

உலக குடும்ப தின வாழ்த்துக்கள்.

அன்புடன் ,

சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button