தமிழ்நாடு

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் ஆட்டிசம் குழந்தைகள் சாதனை! லட்சம் விதை உருண்டைகள் தயார்!!

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் ஆட்டிசம் குழந்தைகள் சாதனை! லட்சம் விதை உருண்டைகள் தயார்!!

 ஆய்க்குடி அமர்சேவா சங்க வளாகத்தில் சிவ சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரிய பெருமக்கள் பங்கேற்ற மாபெரும் விதைப்பந்துகள் தயாரிப்பு நிகழ்ச்சி ஆகஸ்ட் 12, 2025 இல் சிறப்பாக நடைபெற்றது. சங்க செயலர் சங்கர் ராமன் தலைமை தாங்கினார். பள்ளித்தாளாளர் எஸ். பட்டம்மாள் முன்னிலை வகித்தார். செங்கோட்டை காந்திசவூதி வி. விவேகானந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வந்தே மாதரம் முழக்கத்துடன் விதைப்பந்துகள் தயாரிக்கும் விதத்தை விளக்கி பேசினார்.

 மாற்றுத்திறனாளி குழந்தைகள் மட்டற்ற மகிழ்ச்சியுடன் விதைப்பந்துகளை வேகமாக தயாரித்தனர். விரல்களே இல்லாத குழந்தைகள், சராசரி மனிதரைப் போல சரிவர கைகள் இயங்க முடியாத குழந்தைகள், ஆட்டிசம் குழந்தைகள் மண் உருண்டைகளில் விஞ்ஞான கண்ணோட்டத்துடன் விதைகளை செருகி விதைப்பந்துகளை ஆர்வத்துடன் தயாரித்தனர்.

 இதற்கான விதை வகைகள், மண், தண்ணீரை தலைமை ஆசிரியை எஸ், பார்வதி ஒருங்கிணைத்து நிகழ்வினை வெற்றியாக்கினார். மருது, புளி, வாகை, நாவல், வேம்பு, பாதாம், முருங்கை விதை வகைகளை குழந்தைகள் கொண்டு வந்து குவித்திருந்தனர். ஒரு முழு நாளை பள்ளி நிர்வாகம் விதைப்பந்து தயாரிப்பிற்காக ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ். அழகு பூரணம் மற்றும் ஆசிரியைகள் குழந்தைகளை உற்சாகப்படுத்தி வேகப்படுத்தினர்.

 ஒரு கோடி விதைப்பந்துகள் செய்து வீசும் திட்டத்தில் திருமாறன் 43 லட்சம் செய்து முடித்து தற்போது சிவ சரஸ்வதி பள்ளி மாணவ மாணவியர் தம் பங்காக ஒரு லட்சம் விதைகளை இயற்கைக்கு அர்ப்பணித்தது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. பங்கேற்ற அனைவருக்கும் ஹரி பிரியாணி நிறுவனம், “ஆல் அத்தி அரசு விருது” வழங்கி கௌரவித்தது. தயாரிக்கப்பட்ட விதை மண் உருண்டைகளை சாலையோரம், சமூக காடுகள், தரிசு நிலம், ரயில்வே பாதையோரம், ஏரி பகுதி என எறிய தீர்மானிக்கப்பட்டது. ரஜினிகாந்த் ரத்ததான கழக வி.எஸ்.மணியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button