கவிதைகள் (All)

உலக நட்பு நாள் நல்வாழ்த்துக்கள்

உலக நட்பு நாள் நல்வாழ்த்துக்கள் : 30.07.2025

அன்பில் விளைவது நட்பு

அன்பால் வளர்வது நட்பு.

அன்பை வளர்ப்பது நட்பு.

அகநக நட்பது நட்பு. 

அகத்தை நிறைப்பது நட்பு.

அன்னை-தந்தையின் வழியில் அல்லாது

அன்னியமாக இருந்து , பழக்கத்தால்

அன்யோன்யமான உறவே நட்பு.

அருகிலிருந்து பாராமல் வளர்ந்தது

சோழன்-பிசிராந்தையார் நட்பு.

அந்தஸ்து பாராமல் உறவாடியது

குசேலன் – கண்ணன் நட்பு. 

அந்தஸ்து கொடுத்ததால் துரியோதனனுக்காக

ஆருயிர் கொடுத்தது கர்ணன் நட்பு.

அரிய நெல்லிக்கனியை அதியமானுக்கு

அவ்வை கொடுத்தது உயரிய நட்பு. 

அதரத்தில் வரும் உறவல்ல நட்பு.

அடிமனத்தில் இருந்து வருவது நட்பு. 

அகத்தில் மகிழ்ச்சி வரும்பொழுது

அழகாய்க் கூடி களிப்பது நட்பு.

அல்லல் என்று வரும்பொழுது உடனே

அருகிருந்து ஆறுதல் தருவது நட்பு. 

அல்லும் பகலும் பாராது

அழைத்தால் வந்து நிற்கும் நட்பு. 

அல்லது செய்யவிடாமல் தடுக்க

அறிவுரை சொல்வது நட்பு. 

அணுவளவும் எதிர்பார்ப்புகள் இன்றி

அரவணைத்து உதவுவது நட்பு. 

அகிலத்தின் அனைத்து உறவுகளை விட

அருமையான உறவு நட்பு. 

அகில உலக நட்பு நாளில் நாம்

அனைவரும் போற்றி வளர்ப்போம் நட்பை. 

அன்பு நண்பன்,

சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button