இராமநாதபுரம்
கீழக்கரையில் 6 முக்கிய கோரிக்கைகளுடன் ஆட்சியரிடம் மனு

கீழக்கரையில் 6 முக்கிய கோரிக்கைகளுடன் ஆட்சியரிடம் மனு
மக்கள் நல பாதுகாப்புக்கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்கும் நாளில் புகார்

கீழக்கரையில் நிலவும் பல்வேறு பொதுப்பிரச்சனைகளை சுட்டிக்காட்டி, மக்கள் நல பாதுகாப்புக்கழகம் சார்பில் செயலாளர் MUV முகைதீன் இப்ராஹிம் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்கும் நாளில் 6 கோரிக்கை மனுக்களை அளித்தார்.
மனுவில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்
- சாலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
இராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வழியாக செல்லும் நெடுஞ்சாலையில், வட்டாட்சியர் அலுவலகம் முதல் கும்பிடு மதுரை திருப்பம் வரை வணிகர்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பேருந்து ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். - சேதமடைந்த சாலைகள் மற்றும் கால்வாய்களை சீரமைக்க வலியுறுத்தல்
கீழக்கரை நகராட்சி பகுதிகளில் ஜல் ஜீவன் குடிநீர் திட்டத்தால் தோண்டப்பட்ட சாலைகள், கால்வாய்கள் சிதிலமடைந்துள்ளன. குறிப்பாக வடக்குத்தெரு முகைதீனிய்யா கல்வி கூடம் திருப்பத்தில் உள்ள சாலை பழுதடைந்துள்ளது. உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். - வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரி, கல்வி கூடம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்துள்ள 2-வது பிரதான சாலை திருப்பத்தில் இரு புறங்களிலும் வேகத்தடை அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும், ஒரு பக்கம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. விபத்துகளை தடுக்க இரு புறங்களிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். - மின்தடை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுகோள்
கீழக்கரை நகராட்சி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குறைந்த திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்களே இதற்கு காரணம். எனவே கூடுதல் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார். - அரசு மருத்துவமனையில் இரத்த பரிசோதனைக்கு நிரந்தர பணியாளர் நியமிக்க கோரிக்கை
கீழக்கரை அரசு மருத்துவமனையில் இரத்த பரிசோதனை நிலையம் காலதாமதமாக திறக்கப்படுகிறது. பரிசோதகர் வேறு ஊரில் பணிபுரிவதே காரணம். சர்கரை நோயாளிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவதால், நிரந்தர இரத்த பரிசோதகரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். - பேருந்து நிலையம் அருகே ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட வள்ளல் சீதக்காதி சாலை மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகே சிலர் ஆக்கிரமிப்பு செய்து வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
கீழக்கரை பொதுமக்களின் நலன் கருதி மேற்கண்ட கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளார்.




