கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ஹைக்கூ கவிதை நூலுக்கு ‘கவிதை உறவு’ இதழின் இலக்கியப் பரிசு வழங்கப்பட்டது

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ஹைக்கூ கவிதை நூலுக்கு ‘கவிதை உறவு’ இதழின் இலக்கியப் பரிசு வழங்கப்பட்டது

சென்னை. கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘புத்தருக்குப் பொய்
சொல்லத் தெரியாது’ ஹைக்கூ கவிதை நூலுக்கு ‘கவிதை உறவு’
இதழின் சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான இலக்கியப் பரிசு
வழங்கப்பட்டது.
‘கவிதை உறவு’ இதழின் 54-ஆம் ஆண்டு விழாவும், கலைமாமணி
ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் விழாவும் கடந்த
மாதம் சென்னை வாணி மகாலில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, விஐடி வேந்தர் கல்விக்கோ கோ.விஸ்வநாதன்
தலைமையேற்றார். புலவர் சு.மதியழகன் அனைவரையும்
வரவேற்றார்.
விழாவில், டாக்டர் வி.ஜி.பி.சந்தோசம், பத்மபூஷன் டாக்டர் நல்லி
குப்புசாமி செட்டி, தஞ்சைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்
ம.இராசேந்திரன், கலைமாமணி கவியருவி தி.மு.அப்துல் காதர்,
நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டமன்ற
மேனாள் உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், கலைமாமணி ஏர்வாடி
எஸ்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விழாவில், நூல் வெளியீடுகளும், தமிழ்ச்சான்றோர்களுக்கு கவிதை உறவு
விருதுகளும் வழங்கப்பட்டன. 2025-ஆம் ஆண்டு வெளியான சிறந்த
நூல்களுக்கான ‘கவிதை உறவு’ இதழ் வழங்கும் இலக்கியப் பரிசுகளும்
12 தலைப்புகளின்கீழ் வழங்கப்பட்டன.
ஹைக்கூ கவிதை நூல்ப் பிரிவில் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘புத்தருக்குப்
பொய் சொல்லத் தெரியாது’ எனும் நூல் சிறந்த நூலாகத் தேர்வுசெய்யப்பட்டு,
ரூ.5000/- பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழையும் தஞ்சைப் பல்கலைக்
கழக மேனாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன் வழங்கினார்.
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் படைப்பிலக்கிய வெளியில் தொடர்ந்து
இயங்கிவரும் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய நூல்கள் பல இந்திய – உலக
மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ‘கவிதை உறவு’ இலக்கியப்
பரிசினைப் பெறும் இந்நூல், கவிஞர் மு..முருகேஷ் எழுதிய 14-ஆவது ஹைக்கூ
கவிதை நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
படக்குறிப்பு:
சென்னையில் நடைபெற்ற ‘கவிதை உறவு’ இதழின் 54-ஆவது ஆண்டு விழாவில்,
கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘புத்தருக்குப் பொய் சொல்லத் தெரியாது’ ஹைக்கூ கவிதை
நூலுக்கு 2025-ஆம் ஆண்டின் சிறந்த ஹைக்கூ நூலுக்கான முதல் பரிசினை தஞ்சைப்
பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன் வழங்கியபோது எடுத்த படம்.
அருகில், கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன், பேராசிரியர் தி.மு.அப்துல் காதர்,
நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.




