கவிதைகள் (All)

தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்…

தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்…

படைத்தவனின்
பாசம் பெற
பாலைவனம்
அழுத கதை
தெரியுமா…

இறைவனின்
கட்டளைக்கு
இப்ராஹிம்
தன்
இளவலின்
இன்னுயிரை
தர
துணிந்த கதை
புரியுமா…

பத்தெட்டு
வயதிற்கு மேல்
பாசத்தை
வார்த்தெடுக்க
படைத்தவனால்
அருளப்பட்ட
பச்சிளங்குழந்தை
தான்
இஸ்மாயில்.

அன்று
ஒருநாள்
இரவினிலே…

இப்ராஹிம்
தன்
இறைவனின்
கட்டளை என்று
தான்
ஈன்றெடுத்த
இளங்கன்றை
அறுப்பது
போல்
கனா கண்டார்.

இது
ஷைத்தானின்
செயல்
என்று எண்ணி
சற்று
தள்ளிவைத்தார்
செய்தியை.

மறுபடியும்
தன் கனவில்
தன் மகனின்
இன்னுயிரை
அர்ப்பணிக்க
வேண்டும்
என்று
கண்டு விழித்தார்
இப்ராஹிம்.

தூயவன்
அல்லாவின்
கட்டளையை
துணைவியார்
ஹாஜரா விடம்
துக்கத்தோடு
எடுத்துரைக்க…

ஹாஜரா
அம்மையாரோ…

தம்
மகனிடம்
அதை கூறிட
வேண்டும்
என்றார்.

அல்லாஹ்வின்
கட்டளைக்கு
அல்லாப்பு
கொள்ளாமல்
அருமை
மைந்தனிடம்
அதனை
எடுத்துரைத்தார்.

அல்லாஹ்வின்
கட்டளை
இதுவென்றிருந்தால்
மகிழ்ச்சிதான்
தந்தையே
என்றது
அந்த மழலை.

மழலையின்
ஈமானை
மனதில் எண்ணி
மகிழ்ச்சியில்
திளைத்திட்டார்
இப்ராஹிம்.

தியாகத்தின்
திருவுருவாய்
வந்து
உதித்த
திருமகனை
அழைத்துக்கொண்டு
கூர்மையான
கத்தியுடன்
நடந்தனரே
மலையை நோக்கி
இருவரும்.

அதனிடையே
ஆயிரமாயிரம்
இன்னல்கள்
இடைஞ்சல்கள்
அனைத்தையும்
அறுத்தெறிந்து
ஆண்டவன்
கட்டளைக்கு
அடிபணிந்து
சென்றனரே…
இருவரும்.

கூரான
கத்தியும்
குழந்தையும்
குரல்வளையை
அறுக்க மறுத்து
அடம் பிடித்தது
அன்று.

ஆத்திரத்தில்
அருகிலிருந்த
மலையை
வெட்ட
மலையோ சிதறியது
மனதோ பதறியது.

கலங்கிய
மனதுடன்
இறைவனின்
கட்டளையை
நிறைவேற்ற
இயலவில்லையே…
என்று
ஏங்கிய மனதுடன்
ஏக்கத்தில்
இருக்கையிலே…

இறைவனின்
வஹியொன்று
இனிதே வந்தது.

இப்ராஹீமே…

நரபலி
நாயனுக்கில்லை
உள்ளார்ந்த
ஈமானே…
உயர்ந்தது என்றது.

சொர்க்கத்தின்
ஆடு
ஒன்று
இறக்கப்பட்டு
இந்த
தியாகத்தின்
வரலாறு
இன்றளவும்
போற்றப்படுகின்றது.

இதுவே
தியாகத்திருநாள்
தித்திக்கும்
நன்னாள்.

அன்புடன்
அரும்புக்கவி
அன்வர் உசேன்
தொருவளூர்.

அஜந்தா
டெக்ஸ்டைல்ஸ்
இராமநாதபுரம்.
94438 82820.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button