மகாகவி பாரதியார்
மகாகவி பாரதியார் (11-12-1882 ~ 12-09-1921)
பாருக்குள்ளே நல்லநாடு பாரதநாடு,
பாரதியை நமக்களித்த தாய்நாடு,
கவிதையை கருத்திலே கொண்டேன்,
கவிஞரின் கவிதைக்குள் கரைந்தேன் !
கல்வடிவான கடவுள் சிலைபோன்று,
சொல்வடிவான செந்தமிழ்க் கலையவன்,
‘முண்டாசு’ கவிஞனின் மேன்மையை,
‘தண்டோரா’ தட்டிச் சொல்லத்தகுமோ ?
மரபுக்கவியும் புதுக்கவியும் முத்தமிட,
தரவுகளாயிரம் தராமாய்த் தந்தவன்,
பாரதியின்றி கவிதையேதும் யாத்தலில்லை,
சாரதியின்றி கவிதைத்தேரும் நகர்வதில்லை !
உயர்த்தமிழில் கவிதைகள் செய்வித்தவன்,
பயந்தோர்க்கு எழுச்சிமிகு பாப்புனைந்தான்,
வஞ்சனை செய்தே வாழ்வோருக்கும்,
கொஞ்சும் தமிழாலே கடிந்துரைத்தான் !
படைக்கலனாய் பாரதியின் கவிதைகள்,
மடைதிறந்த வெள்ளமாய் பாய்ந்துவரும் ,
தடையில்லா எழுச்சியூட்டும் கருத்துகள்,
விடைகண்டு தெளிந்தாலே வலுவூட்டும் !
புயலாய்வீசிய பெரும்புலவன் இறுதிக்கு,
அயலான்போல் ஐயிருவரோடு நால்வரே,
அலைகடலாய் தமிழினம் அன்றிருந்தும்,
தலைமகனின் இறுதிவழிக்கு தயங்கியதே !
—கருணாகரன் சுப்பையா—
மலேசியா