கவிதைகள் (All)

மெழுகுவர்த்தியே ஏன் அழுகிறாய் ..?

’தமிழ்மாமணி’ கவிஞர். மு.ஹிதாயத்துல்லாஹ்

 

திரியே..! – மெழுகு திரியே !

ஏன் அழுகிறாய்..? உன்னை

தீயிடுவதாலா.. அழுகிறாய்..?

 

மெளனமாய்

அழுகிறாயே..! உன் ஒற்றை

நாவைப் பிடுங்கியது.. யார்?

 

உன் சோகமென்ன? ஒன்றும்

சொல்லிக்கொள்ளாமலேயே…

அழுகிறாயே..?

 

தங்கம் விலை கூடுவதால்

தங்கமகள் கல்யாணம்

எப்படியென்று

தாயின் தவிப்பால் அழுகிறாயா?

 

திரியே.. நீ கரைகிறாயே..!

அது என்ன..? வலியின்

வார்த்தைகளா..?

 

திரியே நீ எரிந்தால்.. தியாகம்..!

உன்னை எரித்தால்..?

கொலை தானே..!

 

தேவாலயங்களில்

உன் அழுகை ஜெபமோ..?

 

எதையெண்ணி

யாருக்காக.. நீ அழுகிறாய்..!

 

வெள்ளை ஆடை

உனக்கு.. யார் தந்தது?

நீ விரும்பியா…? அல்லது

உன் விருப்பத்திற்கு மாறாகவா..?

 

திரியே.. உன் கண்ணீரும் சுடுகிறதே !

என்னகாயமோ… உனக்கு?

 

நீ வந்தால்தான் நான்

எங்கள் இருட்டு

சொல்லிக் கொள்ளாமல் போகிறது

 

நீ வந்தால்தான் தான்

எங்களுக்குத் திருவிழா…

எத்தனை மின் விளக்குகள்

இருந்தாலும்…

 

நீ இல்லாமல்.. தேவாலயங்கள்

அழகுபெறுவதில்லை..!

 

ஆகவே.. திரியே… நீ

அழுவதாய் தவறாக

புரிந்திருக்கிறோமோ..?

 

உன் ஒளி…

எங்களுக்கு மட்டுமல்ல;

அந்த தேவனுக்கே..

பிடித்த ஒளியாகும்..!

 

உன்பணி.. தியாகத்தின் பணி !

யாரும் சாதிக்க முடியாத பணி !

சிலர் பாடம் நடத்தினால்

அழுகை வரும் !

 

நீ அழுது கொண்டே

தியாகப்பாடம்

நடத்துகிறாயே..?

 

நன்றி : இளையான்குடி மெயில் – ஜுன் 2012

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button