கவிதைகள் (All)

ஆமைகள்  அறிவோம்

ஆமைகள்  அறிவோம் 

ஆமை புகுந்த வீடும் 

அமீனா புகுந்த வீடும்

உருப்படாது என்று அன்றே

உரைத்தனர் முன்னோர். 

திட்டமிடாமல் வாங்கிய கடனை

கட்டமுடியாமல் போனால் வரும்

சட்ட நடவடிக்கையே 

அமீனாவின் வருகையாகும். 

புகக்கூடாத ஆமைகள் 

எவையென்று அறிந்தால் – வீடு

சுகப்பட வாழும் வகை 

அகப்படுமே நமக்கு. 

கல்லாமை  அகற்றி கல்விதனைக் கற்றால்

அறியாமை விலகும் ,-விவரம்

புரியாமை இருந்தால் 

புத்தியது மங்கிவிடும் – விளைவு 

தெரியாமை இன்னல் தரும் – எதிலும்

தெளிவில்லாமை நமக்கு 

மனக்குழப்பம் ஏற்படுத்தும்.

பொறாமை உறவுகளை 

புறந்தள்ள வைத்துவிடும்.- பிறரை

மதியாமை  நம்மை 

மதிப்பிழக்க வைத்து விடும் – எதிலும்

முனையாமை நமது மூளையை மழுங்கடிக்கும் – 

முயலாமை இருந்தால் அது முன்னேற்றம் தடுத்து விடும். 

இயலாமை என்றும் இன்னல் புகுத்தி விடும் – உண்மை

உணராமை என்றும் மன உளைச்சல் தந்துவிடும்.

உழைக்காமையால் நமது 

உயர்வு தடைபட்டு விடும் ,

உடல்நலமும் குன்றிவிடும் -தீது

விலக்காமையால் நமக்கு தீமை விளைந்து விடும் – நல்லதற்கு

துணியாமை நமக்கு துன்பம் விளைத்து விடும்- அறிவுரைகள் 

கேளாமை நமக்கு பெருங்

கேடு விளைத்து விடும்.

திட்டமிடாமை செயலைத் திறனற்றதாக்கிவிடும்- சிக்கனம் இல்லாமை நமது

சேமிப்பைத் தடுத்து விடும்.

தன்னம்பிக்கை இல்லாமை

தளர்வைக் கொடுத்துவிடும். 

இவ்வாமைகள் அகற்ற 

ஒவ்வாமை இல்லையெனில் -இன்பம் 

இல்லாமை அகற்றிவிடும் 

இல்லந்தனில் அமைதி வரும். 

தள்ளாமை வரும் முன்னர்

தக்கபடி செயல்படுவோம் ..

அன்புடன் 

சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.

28.2.2025

 கோயம்புத்தூர்.

தொடர்பு எண்: 99401 93912.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button