சிறுமழைக்கே சகதியான ரோடு போக்குவரத்து பாதிப்பு
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே ஆதங்கொத்தங்குடி ரோடு, சிறுமழைக்கு சேதமடைந்து, போக்குவரத்திற்கு சிரமமாக இருக்கிறது. முதுகுளத்தூரில் இருந்து 15 கி.மீ., தொலைவிலுள்ள ஆதங்கொத்தங்குடி, ஆதங்கொத்தங்குடி மேற்கு காலனி ரோடுகள், கண்மாய் கரையோரங்களில் அமைந்துள்ளன.
முதுகுளத்தூரிலிருந்து தேரிருவேலி, ஆதங்கொத்தங்குடி, பூசேரி வழியாக ராமநாதபுரத்திற்கு ஒரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. தற்போது பெய்த சிறுமழைக்கு, கண்மாய் கரைகளிலிருந்து, களிமண் கரைந்து, ரோடு இருக்கும் இடம் தெரியாமல் உருக்குலைந்துள்ளது.
போக்குவரத்திற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. டூவீலர்களில் செல்வோர் சகதியில் சிக்கி விழுந்து அவதிப்படுகின்றனர். ஆதங்கொத்தங்குடி மேற்கு காலனியில், ரோடு, களிமண் ரோடாக மாறிவிட்டது. நடந்து செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
ஆதுங்கொத்தங்குடி ஊராட்சி தலைவர் கல்யாணசுந்தரம் கூறுகையில்,””ரோடு சேதமடைந்துள்ளதால், 6 கி.மீ., தூரம் தேரிருவேலிக்கு நடந்து செல்கிறோம். ரோடு அமைத்து, இரண்டு ஆண்டுகளில் கரடுமுரடாகிவிட்டது. ரோட்டை சீரமைத்து, கண்மாய் கரையோரம் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும், என்றார்.