சரக்கு வாகனங்களால் தினமும் ரூ.50 ஆயிரம் இழப்பு : போலீசில் புகார்
முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் இருந்து கிராமப்புறங்களுக்கு சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வதால், நாள்தோறும் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக, போக்குவரத்துக்கழக டெப்போ மேலாளர் சரவணன், போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
முதுகுளத்தூரில் இருந்து கிராமபுறங்களுக்கு 52 அரசு பஸ்கள், இயக்கப்படுகின்றன. இவை செல்வதற்கு முன்பாக ஏனாதி, கிடாத்திருக்கை, பூக்குளம், இளஞ்செம்பூர், பொதிகுளம், பொசுக்குடி, ஆணைசேரி, காக்கூர், புளியங்குடி உட்பட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, மினி சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர்.
இதனால் தினமும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், முதுகுளத்தூர் அரசு போக்குவரத்து கழகத்துக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும், விபத்துக்களுக்கு வழிவகுக்கும், சரக்கு ஆட்டோக்களில் ஆட்களை ஏற்றி செல்வதை தடுக்க வலியுறுத்தி, முதுகுளத்தூர் போலீஸ், பரமக்குடி வட்டார போக்குவரத்து அதிகாரியிடம், அரசு டெப்போ மேலாளர் சரவணன் புகார் தெரிவித்துள்ளார்.
கண்துடைப்பு: பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தினர், கருப்பணன் தலைமையில் முதுகுளத்தூர் டவுன், கிராமப்புறங்களுக்கு செல்லும் ரோடுகளில், நடத்திய ஆய்வில் ஆட்கள் ஏற்றியதாக, எந்த சரக்கு வாகனங்களும் பிடிபடவில்லை.
கருப்பணன் கூறியதாவது: அரசுக்கு இழப்பீட்டையும், விதிகளை மீறி சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை ஆய்வு செய்ததில், தகவலறிந்த சரக்கு வாகன ஓட்டிகள், ஆட்களை ஏற்றி செல்லாமலும், வாகனங்களை இயக்காமலும் தலைமறைவாகிவிட்டனர். இனி, ரகசிய ஆய்வு நடத்தபடும். விதிமீறும் சரக்கு வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.