கூட்டுறவு சங்கங்களில் ஆய்வு “தினமலர்’ செய்தி எதிரொலி
முதுகுளத்தூர் : “தினமலர்’ செய்தி எதிரொலியாக, போதிய பாதுகாப்பு இல்லாத, நகைகள் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பரமக்குடி கூட்டுறவு துணை பதிவாளர் ஆய்வு செய்தார்.
கூட்டுறவு கடன் சங்கங்களில், “அலாரம்’ வசதி மட்டுமே உள்ளதால், விவசாய நகை கடன்களுக்காக அடகு வைக்கப்படும் விவசாயிகளின் நகைகளுக்கு, போதிய பாதுகாப்பு இல்லை. கிராமங்களில் ஊரின் ஒதுக்குபுறங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில், கண்காணிப்பு கேமரா, “வாட்ச்மேன்’ இல்லை.
நகைகளின் பாதுகாப்பு குறித்து, விவசாயிகள், கூட்டுறவு சங்க செயலாளர்கள், தலைவர்கள் கவலை தெரிவித்த செய்தி, “தினமலர்’ நாளிதழில் நேற்று முன்தினம் வெளியானது. இதை தொடர்ந்து, பாதுகாப்பு இல்லாத முதுகுளத்தூர், கமுதி, கடலாடி பகுதி கூட்டுறவு சங்கங்களில், பரமக்குடி துணை பதிவாளர் சலீம், ஆய்வு செய்தார்.
கூட்டுறவு சங்க செயலாளர்கள் சிலர் கூறுகையில், “”விரைவில், கூட்டுறவு சங்கங்களில் நகைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றனர்.