அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!
அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (17.11.2018)
நிச்சயமாக உங்களுடைய செல்வங்களும், உங்களுடைய பிள்ளைகளும் (உங்களுக்கு ஒருச்) சோதனையேயாகும்; அல்லாஹ்_அவனிடமே மகத்தான கூலி இருக்கின்றது.(64:15)
ஆகவே, இயன்ற அளவிற்கு அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்; (அவனின் கட்டளைகளுக்குச்) செவியும் சாயுங்கள்; மேலும், (அவனுக்குக்) கீழ்ப்படியுங்கள்; உங்களின் நலனுக்காக (அல்லாஹ்வின் வழியில் செல்வங்களைச்) செலவும் செய்யுங்கள். தன் மனதின் உலோபத்தனத்தில் இருந்து எவர் காக்கப்படுகிறாரோ, அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.(64:16)
@நாம் அதிகம் அன்பு பாராட்டும் நம் பிள்ளைகளும், அதிகம் ஆசை வைக்கும் நமது செல்வங்களும் நமக்கான சோதனை என்று அல்லாஹ் கூறுகிறான்; இதுபோன்ற சோதனையில் இருந்து நாம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், அல்லாஹ்வை அதிகம் பயந்து வாழ வேண்டுமென்பதோடு, அல்லாஹ்வுக்காக அதிகம் தர்மங்களையும் செய்ய வேண்டுமென அல்லாஹ் விரும்புகிறான்.
நமக்கான சோதனைகளை அல்லாஹ்விற்காக பொறுமையோடு ஏற்றுக் கொள்வோமானால், அதற்கான மகத்தான நற்கூலியை அல்லாஹ் நமக்கு ஈருலகிலும் தருவதாக சொல்கிறான்; சமீபத்திய கஜா புயலின் சீற்றத்தில் சிக்குண்ட மக்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஒரு தாய் தாம் பெற்ற 21, 19, 15 வயதுடைய மூன்று மகன்களையும் சாவுக்கு பறிகொடுத்து திக்கற்று நிற்கும் சோக செய்தியை ஊடகங்களில் பார்த்ததும் நமக்கு அதிர்ச்சியில் குருதி உறைந்து போனது போலாகி விட்டது. பெருமழையில் வீடு இடிந்து மூன்று மகன்களும் இறந்து போன காட்சியை கண்ட அந்த தாயின் நிலையை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
வீடு என்னும் செல்வத்தை கொண்டே பிள்ளைகளின் உயிர் பறிக்கப்பட்ட நிகழ்வுகளை சிந்திப்போமேயானால், நாம் விரும்பும் பிள்ளைகளும் செல்வங்களும் நமக்கான சோதனை என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இத்தகைய நேரத்தில் எத்தகைய சோதனையானாலும் அது அல்லாஹ்வின் நாட்டம் என உறுதி கொண்டு அதற்கான பொறுமையையும், தீர்வையும் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கும் சமூகமாக நாம் வாழ வேண்டும்.
அல்லாஹ் தன் சோதனையில் இருந்தும், அவனது கோபத்தில் இருந்தும் நம்மையும் நமது சந்ததிகளையும் பாதுகாப்பானாக.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.