இன்றே சாவேனா ?

இன்றே சாவேனா ?

எஸ் வி வேணுகோபாலன்
இன்றே சாவேனா, அம்மா
இன்னும் தவிப்பேனா
ஒன்றரை ஆண்டில்
ஒரு நாளேனும்
நன்றாய் உண்டேனா, இல்லை
நான் தான் சிரித்தேனா
மடியில் கிடந்தேன்
மடியவா பிறந்தேன்
கொடியில் காய்ந்த
துணிபோல் நைந்தேன்
நாளை இருப்பேனா, அம்மா
நலிந்தே உதிர்வேனா
தாவியணைக்கத்
தாய் வருமுன்னே
ஏவுகணைகள்
எரித்துப் போடும்
அதுபோல் மாள்வேனா, இல்லை
பசியால் வீழ்வேனா
காணத் துடித்தேன்
கண்ணில் உலகை
வாழத் துடித்தேன்
எமது மண்ணில்
கனவிலே கிடப்பேனா, இல்லை
கனவுக்குள் இறப்பேனா
யார்க்கு நான் எதிரி
யார்க்கு நான் விரோதி
யாரை நான் பழித்தேன்
யாரை நான் அழித்தேன்
சும்மாவே கொல்வாரா, அம்மா
மனசாட்சி கொல்லாதா?
பாலஸ்தீனர் துயரக் கதையை
பாலுக்கான தீனக் குரலை
பாவிகள் செய்யும் அராஜகத்தை
பாரிலிருப்போர் பார்த்திருப்பாரா
வழியே பிறக்காதா, அம்மா
அமைதி உதிக்காதா?
************
https://bookday.in/indre-saavena-poetry-written-by-sv-venugopalan
எஸ் வி வேணுகோபாலன்
94452 59691