கவிக்கோ…………..

மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் முனைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கு ஈரவரிகளில்…………… கவிதாஞ்சலி

—- தமிழ்மாமணி ஹாஜி மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி—
கவிக்கோவே ! இந்தப்
புவிக்குக் கிடைத்த….
புன்னகையே !
நாங்கள் தேடிக்கண்ட
இலக்கியச் சுரங்கமே !
இதுவரை
எங்களோடு தானே….
இருந்தீர்கள் !
இப்போது ….?
மரபுக்கவிதை – ஜாதகங்கள் !
புதுக்கவிதை – முகவரிகள்
எது கவிதையென்ற
எத்தனையோ பேர்களின்
வினாக்களுக்கு
ஒரே வரியில் விடை !
இது, உங்கள் ஒருவரால் தான்
சாத்தியம் என்று எண்ணுகிறோம் !
உன் கண்ணால்
தூங்கிக் கொள்கிறேன் என்றும்,
மற்ற உறவுகள்
வயிற்றிலிருந்து !
காதல் மட்டும் ….
இதயத்தில் இருந்து
பிறக்கிறதென்று
இவ்வளவு நளினமாய்
யாரும் சொன்னதில்லை !
படித்த இளைஞர்கள்
கல்வி, வேலைவாய்ப்பைத் தேடி
எத்தனையோ ……..
அலுவலக கதவுகளைத்
தட்டுகிறார்கள் !
இப்போது … நவீனமாய்
ஆன்லைனிலும்
அவர்களின் தேடல்கள் !
இவர்களின் தேடலுக்கு
விடையாக
தட்டாதே ! திறந்திருக்கிறதென
வழிகாட்டியிருக்கிறீர்கள் !
இந்த நூற்றாண்டில்
எங்களோடு வாழ்ந்த
நக்கீரரே !
தன்னறையில் இருந்து
போதுமென்று
மண்ணறைக்கு
மௌனித்துப் போனீர்களோ …?
தாய்மொழி
உருதுவாக இருந்தாலும்
தமிழைத்தான்
அதிகமாக நேசித்தீர்கள் ! – காரணம்
சங்கம் வைத்து
தமிழ் காத்த
மதுரை தான்
நீங்கள்
பிறந்து வளர்ந்த
ஞானத் தொட்டில் !
அன்னை தமிழ் உங்களுக்குப் பல
மகுடங்கள் சூட்டி
அழகு பார்த்தாள் !
நாங்கள் நேசித்து வாசித்த
பாடநூலே ! உங்களை
நாங்கள்
படித்துக் கொண்டிருக்கும்போதே
மரணம் !
பறித்துப் போய்விட்டதே !
மண் விளக்கு அணையலாம் !
மணி விளக்கு அணையலாம் !
எங்கள் ஞானவிளக்கு
அணைந்து போனதே ….!
எல்லோரையும் அஞ்ச வைப்பது
மரணம்
வாழ்க்கை விளையாடி உடைத்த
பொம்மைகளை ( மனிதர்களை )
மரணம் தான்
பரிவோடு ஏற்றுக் கொள்கிறதென
மரணத்தை
இன்னொரு தாயாக
உருவகப் படுத்தினீர்கள் !
எல்லோருடைய இதயங்களையும்
இணைப்பது – வேறு எதுவுமே இல்லை !
இலக்கியமே என்றீர்கள் !
இது
நீங்கள் மட்டுமே சொன்ன
வேதம் !
இலக்கணத்திற்காக ……..
இலக்கியம் இல்லை !
இலக்கியத்திற்காகவே !
இலக்கண மென்றீர்கள் !
உங்கள் தோற்றத்தில் … அந்த
தொல்காப்பியராய்
பார்த்து மகிழ்ந்தோம் !
நரைத்தாலும் விடாமல்
இறையை காதலித்த …. நேசரே !
ஒன்று தெரியுமா …?
நீங்கள் இல்லாமல்
உங்கள் நந்தவனம்
பூக்கவில்லை !
புலம்பிக் கொண்டிருக்கிறது !
பூப்பதில்லை யென்று
தீர்மானம் போட்டிருக்கிறதாம் !
அண்ணாந்து பார்க்கும்
உங்கள் கற்பனைகளின்
உயரங்களை
இதுவரை யாரும் தொட்டதில்லை !
கண்ணீரை
கண்கள் உருட்டும்
ஜெபமாலை என்றீர்கள்
ஒவ்வொரு பூக்களும்
இறைவனின் காதல் கடிதங்கள்
என்றீர்கள் !
அல்ஹம்துலில்லாஹ் !
மண் ஒட்டா மரமில்லை !
மந்து ஒட்டாத உறவுமில்லை !
எங்கள் உறவே !
இப்போது …
நீங்கள் எங்கே ….?
எங்கள் விழிகளால்
கண்ணீர் விளக்கேந்தி தேடுகிறோம் !
கிடைப்பீர்களா … ?