General News
துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பு நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி
துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பு தமிழ்த்தேர் மாத இதழ் சார்பில் துபாய் கராமா சி்வ்ஸ்டார் பவனில் 29.07.2012 ஞாயிற்றுக் கிழமை மாலை இப்ஃதார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து நடந்த விழாவிற்கு அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்க, சிறப்பு விருந்தினர்களாக ஈடிஏ அஸ்கான் குழும மனிதவள மேம்பாட்டு மேலாளர் செய்யது அபுதாஹிர் மற்றும் இண்டோ அரப் டெக்கர் குழும மேலாண்மை இயக்குநர் புண்ணியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர்.
பல்வேறு அமைப்புகளின் சார்பாக வருகை தந்திருந்த பிரமுகர்களான ஈமான் பொதுச்செயலாளர் லியாகத் அலி, அமீரகத் தமிழ் மன்றத்தின் ஆசிஃப் மீரான், அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, அஜ்மான் தமிழர்கள் அமைப்பின் அப்துல் லத்தீப், தமிழ்நாடு பண்பாட்டுக்கழகத்தின் குத்தாலம் அஸ்ரப், தாய்மண் வாசகர் வட்டத்தின் அமைப்பாளர் செ.ரெ.பட்டணம் மணி, கவிஞர் அசன்பசர் என்ற கவிமதி மற்றும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் எஸ்.எம்.பாரூக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மதநல்லிணக்கத்திற்கு சாட்சியாக அமைந்த இந்த விழாவில் வானலை வளர்தமிழ் மற்றும் அமீரகத்தைச் சார்ந்த பல்வேறு அமைப்புகளின் அங்கத்தினர்கள் குடும்பத்தினருடன் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை சிவ்ஸ்டார் கோவிந்தராஜ், காவிரிமைந்தன், சிம்மபாரதி, ஜியாவுதீன், கீழைராஸா மற்றும் ஆதிபழனி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.