குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
குழந்தைகள் ,
ஆணின் ஆண்மைக்கு சான்றாக நிற்கும் படைப்புகள் .
பெண்ணிற்கு தாய்மையெனும் பெருமை சேர்க்கும் பிறப்புகள் .
வம்சம் தழைத்து வளர , வந்துதிக்கும் உயிர்கள் .
குடும்பத்தில் குதூகலம் நிறைக்க வரும் பயிர்கள் .
அழகு முகத்தெழிலில் மயங்கிவிடும் மனங்கள் .
மழலை மொழி கேட்டால் , மறைந்து விடும் கவலைகள் .
தவழ்ந்து வரும் அழகில் மகிழ்ந்துவிடும் இதயங்கள் .
கள்ளமில்லாச் சிரிப்பில் கொள்ளைபோகும் உள்ளங்கள் .
பிஞ்சுக் கரங்களின் மென்மையிடம் தோற்றுப்போகும் மலர்கள் .
இறைவன் படைப்பினிலே இதுதானே அதிசயமே .
குழந்தையிடம் பழகிடும்போது குழந்தையாவார் அனைவருமே.
குழந்தை மனம் இருந்துவிட்டால் , குதூகலம் நிறைந்திடுமே .
சண்டையிடும் , அடுத்த கணம் சமாதானமாகிவிடும் .
அடம் பிடிக்கும் , அடுத்தகணம் அதனை மறந்துவிடும்.
போட்டியிடும் , ஆனால் பொறாமையைத் தவிர்த்துவிடும்.
அடிக்க வரும் கரங்களையும் , அரவணைக்கச் செய்துவிடும்.
வெகுளித்தனமான பேச்சால் வெகுவாகக் கவர்ந்துவிடும்.
மல்லிகையாய் , ரோஜாவாய் மணக்கின்ற பருவமிது.
முழுநிலவாய் , தென்றலாய் குளிர்கின்ற பருவமிது.
பத்தரை மாற்றுப் பொன்னாய் ஒளிர்கின்ற பருவமிது.
பாவங்கள் செய்யாத பவித்திர பருவமிது.
சாதி, மத பேதங்கள் தெரியாத பருவமிது.
இனம், மொழி பேதங்கள் பாராத பருவமிது.
பொய், புரட்டு, சூது, வாது , தெரியாத பருவமிது
வையகத்தில் வாழ்வினிலே வரமான பருவமிது .
குழந்தைகள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் ,
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் .
14.11.2025.