முதுகுளத்தூர் ஒன்றியக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
முதுகுளத்தூர் ஒன்றியக்குழு தலைவியின் கணவர், ஆணையர் இடையே மோதல்: கூட்டம் ஒத்திவைப்பு
முதுகுளத்தூரில் தலைவியின் கணவருக்கும், ஆணையருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த ஒன்றியக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
முதுகுளத்தூர் ஒன்றியக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆணையர் வழிவிட்டான், ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் ஆர்.தர்மர் மற்றும் அதிகாரிகள் காலை 11 மணிக்கு வந்து காத்திருந்தனர். கவுன்சிலர்கள் கூட்டத்துக்கு வராமல் ஒன்றிய குழுத்தலைவர் அலுவலகத்தில் இருந்தனர். இதையடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக ஆணையரும், துணைத்தலைவரும் அறிவித்தனர்.
இதை ஏற்றுக்கொள்ள மறுத்த ஒன்றியக்குழுத்தலைவர் சுதந்திரகாந்தி, அவரது கணவர் இருளாண்டி மற்றும் 8 கவுன்சிலர்கள் கூட்டத்தை நடத்துமாறு கூறியதால் ஆணையருக்கும், இருளாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மறுதேதி அறிவிக்காமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து ஆணையர் வழிவிட்டான் கூறியது: ஒன்றியக்குழுத்தலைவியின் கணவர் இருளாண்டி என்னை தகாத வார்த்தையால் பேசி தாக்க முயற்சி செய்தார். இதுதொடர்பாக முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக இருளாண்டி கூறும்போது: ஆணையர் மீது முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன் என்றார்.