முதுகுளத்தூர் அருகே பள்ளி வேன் மரத்தில் மோதி 5 குழந்தைகள் காயம்
முதுகுளத்தூர் சமீபம் பண்ணைக்குளம் கிராமம் அருகே பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்சென்ற வேன் மரத்தில் மோதியதில் 5 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதுகுளத்தூர் அருகே கீரனூரில் இருந்து அபிராமத்திலுள்ள தனியார் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச்சென்ற வேன் மரத்தின் மீது மோதியது. இதில் வேனில் இருந்த நல்லூரைச் சேர்ந்த பாலமுருகன் மகன்கள் ராமர் (10), லெட்சுமணன்(10), லிங்கநாதன் மகன் முகேஸ்(8), சுந்தரபாண்டியன் மகன் திலிப் (7), மாரி மகன் பிரேம் குமார்(9) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த குழந்தைகள் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து அபிராமம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.