உடலின் மொழி
உடலின் மொழி – அ. உமர்பாரூக்
உடலின் மொழி – அ. உமர்பாரூக்
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பாடநூல்
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
creative commons attribution Non Commercial 4.0 international license
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
இது மாற்றுக்களின் காலம்.
அரசியலில், கலாச்சாரத்தில், பண்பாட்டில், இலக்கியத்தில், வேளாண்மையில், மருத்துவத்தில்… என சகல தளங்களிலும் மாற்றுக்களுக்கான தேவை இப்போது அதிகரித்திருக்கிறது.
நமக்கு புதிய பல கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறதாக நம்பப்படுகிற உலகமயமாக்கல், சர்வதேசச் சர்வாதிகாரத்திற்கான திறவுகோலாகவே உள்ளது. தாராளமயத்தில் காணாமல் போன, போய்க் கொண்டிருக்கிற பல பொக்கிஷங்களில் பாரம்பரிய மருத்துவங்களும் அடக்கம். இந்தியாவில் மெக்காலே கல்வித்திட்டத்தால் தகர்த்தெறியப்பட்ட மரபு வழி வேளாண்மை, பாரம்பரிய மருத்துவம் போன்ற நம் மண்ணின் தனித்தன்மைகள் புத்தெழுச்சி பெற வேண்டிய காலம் இது.
உலகமெங்கும் பரவியுள்ள வணிக நிறுவனங்களின் பன்னாட்டுத்தனத்தின் விளைவை நாம் பிற துறைகளில் புரிய முயல்கிறோம். ஆனால், இன்று பன்னாட்டு நிறுவனங்களின் மையமாகவும், உலகச் சந்தையாகவும் வளர்ந்துள்ள மருத்துவ வணிகம் நம் கவனத்தில் இல்லை.
உலகமெங்கிலும் மருத்துவர்களையும், அரசாங்கங்களையும் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டிருக்கும் கோடிக்கால்பூதமாக இன்று மருந்துக் கம்பெனிகள் ஆட்சி செலுத்துகின்றன. வணிக மருத்துவத்தால் குறுக்கொடிக்கப்பட்ட மாற்று மருத்துவங்களின் வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது. நம் இந்திய மருத்துவ நிகழ்வுகள் தான் அதன் சாட்சி.
நாடிப் பரிசோதனை முறையை அடிப்படையாகக் கொண்ட சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி மருத்துவங்களை நம் அரசு எடுத்துக் கொண்ட போது, பாடத்திட்டம் ஆங்கில மருத்துவ அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. நாடிப்பரிசோதனை அடிப்படையிலான பஞ்சபூத தத்துவங்கள் நீக்கப்பட்டன. இப்போது பட்டம் பெற்ற பாரம்பரிய மருத்துவர்கள் தங்கள் மருத்துவ முறைகளையே விளங்காதவர்களாக தயாரிக்கப்படுகிறார்கள்.
ஆங்கில மருத்துவத்திற்கு எதிராக கடந்த இரு நூற்றாண்டுகளாக இருந்த ஹோமியோபதி முறையை அரசு எடுத்துக் கொண்டது. ஆங்கில மருத்துவக் கோட்பாடுகள் ஹோமியோ பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டன.
….இப்படி திட்டமிட்ட மருத்துவச் சதிகள் பாரம்பரிய மருத்துவங்களின் மீது ஏவப்பட்டு வருகின்றன. வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான ஆங்கில மருத்துவத்தை நம் மருத்துவமாக ஏற்றுக் கொண்டு, நம் மண்ணின் மருத்துவங்களை ‘மாற்று மருத்துவம்’ என்று நாமே அழைக்க பழக்கப்பட்டிருக்கிறோம்.
நாம் நம்முடைய தனித்தன்மைகளை யாருடைய நலனுக்காகவோ பலியிட்டுக் கொண்டிருக்கிறோம்.
தன் சொந்த தத்துவக்கால்களில் நின்று, பரவுகிற அக்குபங்சர் போன்ற மருத்துவங்களை நாம் வரவேற்க வேண்டும். அதன் ‘ஆரோக்கியம்’ பற்றிய புரிதலை நாம் உள்வாங்க வேண்டும்.
நம்முடைய மருத்துவத் தேவைகளை நாமே பூர்த்தி செய்துகொள்ளுமளவிற்கு மருத்துவ ஞானம் பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவ ஞானம் _ என்பது மருந்துகளைப் பற்றிய அறிவு அல்ல; உடலின் இயக்கத்தையும், அதன் தேவையையும் உணர்ந்து கொள்வதாகும்.
நமக்கு நாமே மருத்துவர்களாகும் முயற்சிக்கு இந்த ‘உடலின் மொழி’ ஒரு துவக்கமாகும்.
பாடல் வரிகளில் மறை பொருளாய் வைக்கப்பட்ட மருத்துவ உண்மைகள் முச்சந்தியில் போட்டு உடைக்கும் முயற்சிதான் இந்நூல்.
முதல்பதிப்பு வெளிவந்து ஒரு மாதத்திற்குள் பிரதிகள் தீர்ந்து விட்டன என்பதே தமிழ் மக்களின் ஆரோக்கியத் தேடலை நமக்கு உணர்த்துகிறது.
‘உடலின் மொழி’யை மக்களுக்குக் கற்பிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்திய Healer. இயற்கை குமார், நூல் வெளிவர துணை நின்ற Healer. ஞானமூர்த்தி, எழுத்தாளர். காமுத்துரை, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ச. தமிழ்ச்செல்வன், நூலை உள்வாங்கி, வடிவமைத்து, வெளியிட்ட ‘பாரதி புத்தகாலயம்’ நாகராஜன் ஆகியோரோடு… என்னோடு தோள் கொடுத்த சமூக அக்கறையுள்ள அக்குபங்சர் மருத்துவர்களுக்கும் இந்த நூலின் மூலம் மக்கள் பெறும் விழிப்புணர்வில் பங்குண்டு.
தோழமையுடன்
Healer.அ. உமர்பாரூக்
அகாடமி ஆஃப் அக்குபங்சர்,
33 ஏ, கிராமச்சாவடித்தெரு
கம்பம்_625 516
செல்; 9488011505, 91500 95244
பதிவிறக்க*
http://freetamilebooks.com/
—