உச்சி முனை
உச்சி முனை
============================== ========================ருத்ரா
வானத்தையே இடிக்கின்ற
கட்டிடங்கள்.
கண்ணாடி உடம்பு போர்த்து
இந்திரன் போல் ஆயிரங்கண் பூத்து
அகல அகல விழிப்பது
ஆச்சரியமே!
பரிணாம ஓட்டம் எடுக்கும் வேகம்
மைல் கல்கள் தேவையில்லாமல்..
நடப்பட்டிருந்தாலும் கூட
அவற்றை பிடுங்கி எறிந்து கொண்டு..
புதிய உச்சிமுனைக்கு
உயரும் விதம் கண்டு
மனிதன் விம்மி விம்மி
மெய் மறந்தான்.
இதையும் புத்தகங்கள் ஆக்கிவிட
டார்வின் கூட
வண்டி வண்டியாக அல்லவா
குவிக்க வேண்டும்.
பில்லியன் பில்லியன் பக்கங்களில்
கூகிள்
ஜன்னல் திறந்து வைத்திருக்கிறது.
பிரம்ம சூத்திரங்கள் கூட
பூலியன் அல்ஜீப்ராவுக்குள்
சுருண்டு கொண்டது!
உலகத்து இரத்த சதையெல்லாம்
திரட்டி நிற்கின்ற
அந்த உயர்ந்த உயர்ந்த கட்டிடங்கள்
மூலதனத்தை பங்கு போட்டு
சந்தை நடத்துவதில்
அறிவின் கூர்மை செறிவு
எல்லாம் வியக்க வைக்கிறது.
லாபத்தில் ஒரு சொட்டு குறைந்தாலும்
ரத்த ஆறுகளை ஓடவிடத்தயங்காத
விஞ்ஞான சாணக்கியங்கள்!
ஆனாலும் சிகரங்களுக்கு எல்லாம் சிகரமாய்
நிற்கும்
ஊசி முனையில்
பில்லியன் பில்லியன் பட்டாம்பூச்சிகள்
கழுவேற்றப்பட்டு
கலர் கலராய் கண்ணீர் கிராஃபிக்ஸ் தான்.
இதை உரத்து முழக்க
குரல் இல்லை தெம்பு இல்லை.
ஏனெனில் சுற்றிக்குவிந்து கிடப்பது
உயிரற்ற எலும்புகளே!
============================== ============================== ===
Tags: உச்சி முனை