முதுகுளத்தூர் அருகே மணல் திருட்டு: 3 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மணல் திருடியதாக ஜேசிபி இயந்திர ஆப்ரேட்டர்கள் 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
எம்.சாலை கிராமத்தில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அப்பகுதிக்குச் சென்ற போலீஸார், மணல் திருடுவதை பார்த்தனர். மணல் திருட்டுக்கு பயன்படுத்திய 2 கிட்டாச்சி, 1 ஜே.சி.பி உள்ளிட்ட இயந்திரங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இயந்திர ஆப்ரேட்டர்களான கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராஜா மகன் ராஜ்குமார்(24), உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த சூனால் மகன் ராஜேஷ் (26), ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சூசை மகன் மனோஜ் (34) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், அரசு அனுமதியின்றி மணல் குவாரி நடத்திய வந்த இளஞ்செம்பூரைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் பரமேஸ்வரன் (45) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.