முதுகுளத்தூரில் பட்டா மாறுதல் கிடைக்காமல் பொது மக்கள் அவதி
முதுகுளத்தூர், . முதுகுளத்தூர் தாலுகா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல் கிடைக்காததால் அவதியடைந்து வருகின்றனர்.
முதுகுளத்தூர் தாலுகாவில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தினமும் பட்டா மாறுதல், சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று என பல்வேறு சான்றுகள் கேட்டு மாணவர்கள், பொது மக்கள் வருகின்றனர். ஆனால் விண்ணப்பித்து 6 மாதங்களுக்கு மேலாகியும் பட்டா மாறுதல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள், விவசாயிகள் மற் றும் மாணவ, மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவர்கள் தினமும் தாலுகா அலுவலகத்திற்கு பொதுமக்கள் அலைந்து வருகின்றனர்.
தாமதமின்றி சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து முதுகுளத்தூரை சேர்ந்த மணிகண்டன் கூறுகையில், அனைத்து வகையான சான்றுகளும் ஆன்லைன் மூலம் விரைவில் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வருமான சான்றிதழ், சாதி சான்றுகளை வழங்க தனி மண்டல துணை தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் முதுகுளத்தூர் தாலுகா அலுவலத்தில் பட்டா மாறுதல் உள்ளிட்ட சான்றிதழ்களை விண்ணப்பித்து 6 மாதங்களுக்கு மேலாகியும் வழங்காமல் தாமதம் செய்து வருகின்றனர். இதனால் கல்லூரிகளில் சேர உள்ள மாணவ, மாணவிகள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
தாலுகா அலுவலக ஊழியர்கள் சிலர் கூறுகையில், “சான்றிதழ் கோரி தினமும் நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். பட்டா மாறுதல் சான்றுக்காக உள்ள தனி சாப்ட்வேர் பழுதாகி விட்டது. இதனால் பட்டா மாறுதல் வழங்க முடியாத நிலை உள்ளது. மேலும் போதுமான நில அளவையாளர்கள் இல்லை. இந்த குறைகள் விரைவில் சரி செய்யப்பட்டு, சான்றுகள் வழங்கப்படும்“ என்றார்.