இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் இளைஞர் சாவு
பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் மேலக்காவனூர் பகுதியில் சனிக்கிழமை கணவன், மனைவி சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதியதில் கணவர் உயிரிழந்தார்.
முதுகுளத்தூர் வட்டம் ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் மோகன் (29). இவரது மனைவி காந்திமதி (27). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால், சிகிச்சைக்காக கணவனும்- மனைவியும் இருசக்கர வாகனத்தில் பரமக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
மேலக்காவனூர் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக அவர்கள் வந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதியது. இதில் மோகன் தலையில் பலத்த காயமுற்று, பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிறகு மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் காந்திமதி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.