மணல் லாரியை மறித்து சாலை மறியல்: கிராமத்தினர் மீது வழக்கு
- News
- May 28, 2016
- முதுகுளத்துார்
- 1 minute read
முதுகுளத்தூர் அருகே கண்டிலான் கிராமத்தில் மணல் லாரிகளால் சாலைகள் சேதமடைவதாகக் கூறி, மணல் அள்ளிச்சென்ற லாரிகளை மறித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டிலான் கிராமத்துக்குள் மணல் லாரிகள் வந்து செல்வதால் சாலைகள் சேதமடைவதாகக் கூறி, உக்கிரபாண்டி மகன் திருச்செல்வம் (43) மற்றும் காசி மகன் சண்முகராஜா ஆகியோர் தலைமையில் கிராமத்தினர், மணல் அள்ளி வந்த லாரிகளை வழிமறித்தனர். இதனால், அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த டி.எஸ்.பி. கணபதி மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, மணல் லாரியால் சாலைகள் சேதம் அடைவதாகவும்,விபத்துகள் ஏற்படுவதாகவும் டி.எஸ்.பி.யிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
போலீஸார் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தையை அடுத்து, கிராம மக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் முருகன் அளித்த புகாரின்பேரில், டி.எஸ்.பி. கணபதியின் உத்தரவுப்படி, போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக சண்முகராஜா,திருச்செல்வம் மற்றும் கிராமத்தினர் பலர் மீதும் சார்பு-ஆய்வாளர் அல்லிராணி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.