இருளில் மூழ்கிய பொசுக்குடி மின் பழுது சீரமைப்பில் தொய்வு
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே பொசுக்குடியில் மின் பழுதை சீரமைப்பதில் ஏற்பட்டுள்ள தொய்வால், ஆறு நாட்களாக இருளில் மூழ்கியுள்ளது. குடிநீர் சப்ளை இல்லை. மக்கள் தவிக்கின்றனர்.பொசுக்குடியில் டிரான்ஸ்பார்மர் பழுதால், கடந்த சில ஆண்டுகளாகவே, குறைந்தழுத்த மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. சிறுமழைக்கும் டிரான்ஸ்பார்மர் பழுதாகி, கிராமமே இருளில் மூழ்குகிறது. இதேபோல கடந்த ஆறு நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். குடிநீர் சப்ளையின்றி மக்கள் திண்டாடுகின்றனர்.
பொசுக்குடி ஊராட்சி தலைவர் லட்சுமணன் கூறியதாவது: 20 ஆண்டுகளுக்கு முன், பொசுக்குடியில் அமைக்கபட்ட டிரான்ஸ்பர்மர் அடிக்கடி பழுதாகி, மின் சப்ளை துண்டிக்கபடுவது வழக்கமாக உள்ளது. பரமக்குடி மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்டும் பலனில்லை, என்றார்.
பரமக்குடி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “”சமீபத்தில் தொடர்ந்து பெய்த மழைக்கு, பெரும்பாலான இடங்களில் மின் சப்ளையில் பழுது ஏற்பட்டுள்ளது. பொசுக்குடிக்கு விரைவில் மின் சப்ளை செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.