அனுமதியின்றி வாகனங்களில் கட்சிக்கொடி: வழக்குப் பதிவு
முதுகுளத்தூரில் சனிக்கிழமை அனுமதியின்றி வாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள் கட்டி வந்த 2 வாகனங்கள் மீது தேர்தல் விதி மீறியதாக முதுகுளத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு சுவர்களில் தேர்தல் விளம்பரங்கள் வரையக்கூடாது என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் வாகனங்களில் அனுமதியின்றி கட்சிக்கொடிகள் கட்டிவருவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதுகுளத்தூர் காந்தி சிலை அருகில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கமுதியைச் சேர்ந்த விஜயபாண்டி தனது ஸ்கார்பியோ வாகனத்தில் அதிமுக கொடியை கட்டி வந்ததாக தேர்தல் பறக்கும்படை தனிப்பிரிவு வட்டாட்சியர் பூவீரராஜா, வட்டாட்சியர் ரவீந்திரநாதன் ஆகியோர் முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விஜயபாண்டி மீது தேர்தல் விதி முறைகளை மீறியதாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் முதுகுளத்தூர் மெயின்ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சி புத்தூரைச்சேர்ந்த வரதராஜன் அனுமதியில்லாமல் தனது வாகனத்தில் திமுக கட்சிக்கொடியினை கட்டி வந்தது தெரியவந்தது. முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் வரதராஜன் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.