அனுமதியின்றி மணல் அள்ளிய 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்: 4 ஓட்டுநர்கள் கைது
முதுகுளத்தூர் அருகே வியாழக்கிழமை வாகன சோதனையின் போது அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 3 டிப்பர் லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்ததோடு அதன் ஓட்டுநர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
முதுகுளத்தூர் டி.எஸ்.பி. நடராஜன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் மூக்கன் தலைமையில் தலைமைக் காவலர்கள் மணி, கோவிந்தராஜ், முருகானந்தம் ஆகியோர் தேரிருவேலியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது முதுகுளத்தூரில் இருந்து வந்த 3 டிப்பர் லாரிகளை மறித்து சோதனையிட்ட போது அனுமதியில்லாமல் மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இதன் பேரில் லாரி ஓட்டுநர்கள் முதுகுளத்தூரைச் சேர்ந்த ராமசாமி மகன் ராமேந்திரன் (39), சுந்தர்ராஜ் மகன் சந்திரசேகர் (47), சண்முகம் மகன் லெட்சுமணன் (46), வடக்கூரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் முருகன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.